குடியரசுத்தலைவர் ஆட்சியை அறிவித்ததிலிருந்து ஸ்ரீநகரின் சர்ச் வீதி “விஐபி பகுதியாக” மாறிவிட்டது. அதில் உயர்மட்ட சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் வீடுகள், அரசினர் விடுதிகள் மற்றும் மந்திரிகளின் மாளிகைகள் ஆகியவை உள்ளன. எனவே அங்குப் பாதுகாப்பு அதிகமாக இருப்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். இதற்கு நேரெதிரில் குடியிருப்புச் சாலையின் மறுபுறத்தில், முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் அலுவலகங்கள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வல்லுந்தில் வந்த இளைஞன் அந்த அலுவலகம்வரை வந்து அங்கிருந்த பாதுகாவலரிடம் முதலாளிகள் எப்போது வருவார்கள், வேலைத் தேடுபவர்கள் எப்போது அவர்களைச் சந்திக்கலாம் என்பது பற்றிய சில கேள்விகளைக் கேட்டனர் என்று எங்களிடம் கூறப்பட்டது. அவர்களில் ஒருவர் சிகரெட்டை பற்ற வைத்த கணத்தில் அவரது மழைக் கோட்டுக்குள் ஆயுதங்கள் உள்ள பையை அவர் கண்டார். பயங்கரவாதிகள் துணிச்சலுடன், மிகவும் பாதுகாப்புள்ள காஷ்மீரின் இந்த இடங்களில் இரவு நேர பந்தயங்களை நடத்தும் அளவு நிலைமை உள்ளதாகத் தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்ட புதிய முன்னணி அரசியல் தலைவர்கள்தான் அவர்களுடைய இலக்கு என்பதாகத் தெரிகிறது.
நம்பிக்கைக்கு கடிவாளம்
பொது ஊடகங்களில் காட்டப்படும் அல்லது காட்டப்படாத ஆனால் நிலவுவதாகச் சொல்லப்படும் அமைதியான நிலை இருப்பது போன்ற கதைகள் களத்தில் உள்ள உண்மை நிலைமைகளை போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்பதையே தெரிவிக்கின்றன. சோபூரில் ஒரு ஆயுத மோதல் நடந்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு, இந்த வாரத்தில் ஸ்ரீநகரின் மையப் பகுதியில் ஒரு காவலர் அவரது வீட்டிற்கு அருகிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில காவல்துறைத் தலைமை இயக்குநர், உளவுத்துறை முகமைகளின் தலைவர்கள் மற்றும் மத்திய காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஒரு மூத்த அதிகாரி, இந்த ஆண்டின் ‘பயணத்தை’ நடத்த முடிவு செய்யுமுன் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் பங்கேற்றவர்கள் வளர்ச்சியை விட பாதுகாப்பின் மீதே கவனம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டினர். பிரதமர் மாநில அரசியல்வாதிகளையும் மற்றவர்களையும் கடந்த வியாழனன்று(17/6/21) ஒரு கூட்டத்திற்கு அழைத்திருந்தார். முன்னர் மாநிலமாக இருந்த காஷ்மீரை மீண்டும் மறு சீரமைப்பு செய்யப் போவதாக அங்கு வதந்திகள் எழுந்தன. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் பேச்சிலிருந்து விடுபடுவதாக இல்லை.
ஒவ்வொரு நாளும் சிறுவர்கள் தலைமறைவாகி, போராளிகளாக மாறி வருகிறார்கள். மேலும் பல பாகிஸ்தான் தீவிரவாதிகளும் பதுங்கி இருக்கின்றனர். தீவிரவாதத்தைத் தடுக்க சிறையடைப்பு, விசாரணை, கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை பயன்தரவில்லை. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் பகுத்தறிவு, மறுசீரமைப்புக் கல்வி மற்றும் தீவிரவாத ஒழிப்பு திட்டங்கள் ஆகியவை முயற்சிக்கப்படவே இல்லை. பேச்சுவார்த்தைக்கான மூன்று வருடங்கள் பெரும்பாலும் வீணடிக்கப்பட்டுவிட்டது.
திமிர்பிடித்த தலைமைச் செயலாளர்
இன்றைக்குச் சரியாக மூன்று வருடங்களுக்கு முன், 2018, ஜூன் 20 ம் நாள் அப்போது மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி திணிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முப்தி முகம்மது சையதின் அரசு, கூட்டணியில் இருந்த பாஜகவால் கவிழ்க்கப்பட்டது.
புதிய தலைமைச் செயலாளர் பி.வி.ஆர். சுப்பிரமணியம், ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் ஆகியோரின் அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டார். சுப்பிரமணியம், முதல் துணைநிலை ஆளுநர் ஜி.சி. முர்முவை வேலை செய்ய அனுமதிக்கவில்லை. மேலும் முர்முவும், அனைத்து படைகளும், முகமைகளும் ஏற்றுக் கொண்ட பிறகும் உயர்வேக இணையதள இணைப்பை மீண்டும் தருவதை அவர் உறுதி செய்யவில்லை. மிகவும் திறமையான தற்போதைய துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒரு பார்வையாளரிடம் அதிகார வர்க்கம் குதிரையின் முன்னங்கால்களை கட்டிப் போட்டது போல் இருப்பதால் நல்ல நிர்வாகத்தைத் தர இயலவில்லை என்று கூறியதாகக் சொல்லப்படுகிறது. இவையாவும் ஒன்றிய அரசின் நம்பகத்தன்மையை மோசமாக பாதித்து விட்டது. ஏனெனில் சுப்பிரமணியத்தின் செல்வாக்கு பிரதமரின் பின்புலத்தில் ஊன்றி நிற்கிறது. அவரை காஷ்மீருக்கு நியமித்த பல நாட்களுக்குப் பிறகும் அவர் அங்கு செல்லவில்லை என்பது அவரது செல்வாக்கை வெளிப்படுத்துவதாக இருந்தது. அவரும் அவருக்கு அடுத்த நிலை அதிகாரிகளும் ஒரு சில கூட்டங்களுக்கு மட்டும் வந்து சென்றனர். இறுதியில் உள்துறை அமைச்சர் தலையிட்ட பின்னர்தான் அவர் பதவி ஏற்கச் சென்றார்.
காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்
” மீண்டும் கிராமத்திற்கு” – ஏமாற்றம்
சுப்பிரமணியம் முதலில் வந்தவுடன் ஆளுநர் ஆட்சியில் நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் முன்னேற்றத்திற்கான புதிய புத்தகம் எழுதப்படும் என்று கூறினார். ஆனால் களத்தில், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் ஒவ்வொரு துறை பற்றியும், ஒவ்வொரு மாவட்டம் பற்றியும் பளபளப்பான, விலையுயர்ந்த கையேடுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டனவே அன்றி புத்துயிர் பெற்ற நிர்வாகத்திற்காக செய்யப்பட்டவை மிகக் குறைவு. அவர் மீண்டும் மீண்டும் தனது கீழ்மட்ட அதிகாரிகளை “கிராமங்களுக்குத் திரும்பி” மக்களின் பிரச்சனைகளைப் பற்றிக் கற்று வரக் கூறினார். போராளிகளால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் கூட ஆவலுடன் முன்வந்து தங்கள் பிரச்சனைகளையும், விருப்பங்களையும் கூறினர். ஆனால் அதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை. ஆதலால் மீண்டும் அவர் அதிகாரிகளை கிராமத்தை நோக்கி அனுப்பிய போது மக்கள் அவர்களைப் புறக்கணித்தனர். ஜம்மு காஷ்மீர் பற்றிய புரிதல் உள்ள எந்த ஒரு போர்தந்திர ரீதியில் திட்டமிடுபவரும் காஷ்மீரின் அடிப்படை பிரச்சினை ஊழல் நிறைந்திருப்பதும், மக்களை மிரட்டி பணம் பறிக்கும் அதிகாரத்துவமும்தான் என்பதை அறிந்திருப்பார்கள். அதிகாரிகள் பெரும்பாலும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது லஞ்சம் கொடுத்தவர்கள் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களில் பலரும் நாட்டின் மீது பற்றுடையவர்களும் அல்ல. அவர்களுக்குள் நல்வாய்ப்புப் பெற்றவர்களும் அல்ல. மாறாக, தங்கள் அதிகார வலைப் பின்னலுக்காகவும், சலுகைகளுக்காகவும் நியமிக்கப் பட்டவர்கள்.
ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்
மோசமான நிர்வாகத்தால் ஆத்திரம் தூண்டப்படுகிறது
நான் ‘The Generation of Rage in Kashmir’ ல் சுட்டிக்காட்டியது போல, கெடுவாய்ப்பாக இவை எல்லாவற்றிற்கும், இந்திய அரசின் பெயரால் செயல்பட்டுவரும் அதிகார வர்க்கத்தினரிடைய உள்ள புத்தாக்கக் கருத்துக்கள் மற்றும் புத்தாக்க கட்டுக்கதைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் செயல்படாத மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் நபர்களுக்கு எதிரான இளைஞர்களின் ஆத்திரம் கோபத்தைத் தூண்டி விடுவதே காரணம்.
அதிகாரபூர்வமாக போராளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் காட்டப்பட்டாலும், போராளிகள் இன்னும் உலவிக் கொண்டுதானிருக்கிறார்கள் சிறுவர்கள் தொடர்ந்து தலைமறைவாகி வருகிறார்கள். அவர்களில் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். களநிலவரம் மேல்பகுதியில் அமைதியாகத் தோன்றினாலும் அதன் அடியில் அமைதியின்மையே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஆர்எஸ்எஸின் அகண்ட பாரதம் எனும் அபத்தக் கனவு’ – சூர்யா சேவியர்
மேற்கு மற்றும் கிழக்கிலிருந்து அச்சுறுத்தல்கள்
இதற்கிடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கருகில் ஜம்மு காஷ்மீரின் தென் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் இரண்டு பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. 2020 ல் சீன மக்கள் விடுதலைப் படை அகாசி சென் பகுதியில் போர் தாக்குதலில் ஈடுபட்ட பின், லடாக் பகுதியில் ஊடுருவி இருப்பது குறிப்பாக கவலை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக, மாதங்களாக சீனா உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கருகில் லடாக்கிலும் வடகிழக்கிலும் போருக்கான தயாரிப்புகளை முடுக்கி விட்டுள்ளது. பெரும் அளவிலான பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் திபெத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திபெத் பகுதியில் இரண்டு விமான தளங்களில் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எல்லைகள் கட்டுப்பாட்டு கோட்டில் மிகப்பெரும் அளவில் இராணுவ வீரர்கள் மாற்றி நிறுத்தப் பட்டுள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னால் நான் வெளிப்படுத்திய அச்சம் உண்மையாகி விடக் கூடாது என நம்புகிறோம். முதலில் மார்ச்சு 2011 ல் இந்தியா சீனா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரின் எழுச்சி என்ற மும்முனைப் தாக்குதலை எதிர் நோக்கி இருப்பதாகக் கூறினேன். இவை மூன்றும் ஒன்று குவியக்கூடும்.
www.the wire.in இணையதளத்தில் டேவிட் தேவதாஸ் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.