தமிழ்நாடு ஆளுநர் ரவி தன்னுடைய அதிகார வரம்பை மீறி செயல்படுவதாகவும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத போக்கை கண்டிப்பதாகவும் முரசொலி இதழ் தெரிவித்துள்ளது.
இது குறித்து முரசொலியில் எழுதப்பட்ட கட்டுரை, தமிழக ஆளுநர் பொறுப்பேற்றுள்ள ரவி அவர்கள், சில நேரங்களில் தனது அதிகார எல்லை மீறி செயப்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணிடத் தோன்றுகிறது? இன்றைய தமிழக ஆளுநர் மேதகு ரவி, தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்கு முன் நாகாலாந்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய போது, நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகின!
நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக கட்சியின் தலைவர் சிவ்யாங் கோஸ்யாக் (Chingning Konyan) அங்கு ஆளுநராகப் பணியாற்றிய திரு.ரவி குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஆளுநர் ரவியின் செயல்பாடு மகிழ்ச்சி தருவதாக இருந்ததில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் அவரது குறுக்கீடு அதிகமிருந்தது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
நமது ஆளுநராக வந்துள்ள ரவியின் அந்துமீறல்கள், நாகாலாந்து அரசு நிர்வாகத்தின்மீது மட்டுமல்ல அங்குள்ள ஊடகவியலாளர்கள் மீதும் இருந்துள்ளது.
நாகாலந்து ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழக ஆளுநராக அவர் நியமிக்கப்பட்ட நேரத்தில், ஆளுநர் ரவிக்கு அந்த அரசு சார்பில் ஒரு பிரிவு உபச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது; அப்போது பத்திரிகையாளர்கள் ஒட்டுமொத்தமாக ஆளுநர் ரவிக்குத் தரப்பட்ட பிரிவு உபச்சார விழாவைப் புறக்கணித்துள்ளார்கள். அந்தப் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்ளுமாறு பத்திரிகையாளர்களுக்குப் பல வேண்டுகோள்கள் வைத்தும் அதை அவர்கள் ஏற்க முன்வரவில்லை. அந்தச் செய்தியாளர்களை கவர்னராக நாகாலாந்தில் இருந்த காலத்தில் புண்படுத்தியுள்ளார் ரவி.
இத்தகைய வரலாற்றுப் பின்னணிகளோடு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார் ரவி.
ஆளுநர் திரு.ரவி அவர்கள் அரசியல்வாதியாக இருந்து,அரசியல் தட்ப வெப்பங்களை உணர்ந்து, அணுபவங்கள் பல பெற்று ஆளுநர் ஆனவரில்லை; அவர் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து, ஓய்வுக்குப் பின் ஆளுநராக அமர்த்தப்பட்டவர். மிரட்டல், உருட்டல் பாணிகள் காவல் துறைக்குத் தேவை; பல நேரங்களில் அந்த பாணி கைகொடுக்கும். ஆனால் அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்!
குடியாக தின விழாவையொட்டி ஆளுநர் ரவி விடுத்துள்ள செய்தி அவர் தனது பொறுப்புணராது தமிழக மக்களின் தன் மானத்தை உரசிப்பார்க்க நினைப்பதாகவே தோன்றுகிறது.
‘நீட்’டுக்கு எதிராக தமிழகச் சட்ட மன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மாதங்கள் சில கடந்தும், அது கிடப்பிலே கிடக்கிறது. அதன் நிலை என்னவென்று தெரியாத நிலையில், ‘நீட்’ வருவதற்கு முன் இருந்த நிலையை விட “நீட்” வந்தபின் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறியிருக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழகமுமே (ஒரு சில சங்கிகளைத்தவிர) நீட்டை எதிர்த்து நிற்கும் நிலையில், தமிழகத்தில் சட்டப் பேரவை அதனை எதிர்த்து ஒருமித்த்த் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதுவும் அவரது பரிசீலனையில் இருக்கும் காலக்கட்டத்தில் இப்படி அறிவிப்பது எந்த வகை நியாயம்?
மேதகு ஆளூநர் ரவியின் குடியரசு தினச்செய்தி ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஆளுநரின் கருத்துக்கு உரிய எதிர்ப்பை தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேதகு ரவி, ஆளுநர் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு,மற்ற இந்திய மாநிலங்களைப் போன்றது அல்ல; என்பதை முதலில் அவர் உணர வேண்டும். இந்த மண், அரசியலில் புடம் போடப்பட்ட மண். இங்கே குக்கிராமங்களில் வசிப்பவர்கள் கூட அரசியல் தெளிவு மிகுந்தவர்கள்.
ஆளுநர் ரவி எத்தகைய கருத்தையும், தெரிவிக்குமுன் தமிழகத்தைப் புரிந்து கொண்டு அதன் வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு கூறுவது, அவரது பதவிக்குப் பெருமை சேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏறத்தாழ 7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழகச் சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புததுக்கு அனுப்பிய தீர்பானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும்.
ஒரு கட்சி தனது கொள்கைகளைச் சொல்லி, மக்களிடம் வாக்குப் பெற்று ஆட்சிப் பீடம் ஏறுகிறது. மக்களும் அவர்கள் எண்ணத்தை “அந்தக் கட்சி நிறைவேற்றும்” என்று எண்ணி வாக்களிகிறார்கள்.
அந்த மக்களின் எதிர்பார்ப்பை தீர்மானமாக்கி அனுப்பும் போது, அதை ஒரு ஆளுநர் அலட்சியப்படுத்துவது என்பது. சுமார் 7 கோடி மக்களை அவமதிப்பது என்பதை உணர வேண்டும்.
ஸ்ரீபிரகாசா, உஜ்ஜல்சிங், கே.கே.ஷா, பி.சி.அலெக்சாண்டர், பர்னாலா, பட்வாரி, சென்னா ரெட்டி, ரோசையா, புரோகித் என அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஆளுநராகப் பார்த்த மாநிலம் தமிழ்நாடு. அரசியல் சட்டம் அவர்களுக்கு அளித்த அதிகாரத்தை மதித்துப் புகழ் பெற்றவர்களும், மிதித்து களங்கங்களாக விளங்கியவர்களும் உண்டு.
ஆளுநர் ஒன்றிய அரசின் பிரதிநிதி என்பதை ஏற்கிறோம்; அவருடைய தலையாயக் கடமை, தான் பொறுப்பேற்றிருக்கும் மாநில மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தை ஒன்றியத்துக்குத் தெரிவித்து அவர்களுக்கு உண்மை நிலையை உளர்த்த வேண்டுமே தவிர, ஒன்றிய அரசின் முடிவை மக்கள் மீது திணிப்பது அல்ல. அதனை முதலில் தமிழக ஆளுந்ர் ரவி உணர வேண்டும்.
தமிழக அரியல்வாதிகள் பல கருத்துக்களில் ஒன்றுபடுவதில்லை. ஆனால் பல ஜீவாதார உரிமைகளில் அவர்கள் ஒன்று பட்டு நிற்பார்கள். அங்கே கட்சி வேறுபாடுகளைக் கணைமுடியாது. அப்படிப்பட்ட உரிமைகளில் ஒன்றுதான் ‘நீட்” வேண்டாம் என்பது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான்; இதில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மாறுபட்ட கருத்தில்லை.
பல பிரச்சினைகளில், எதிரும் புதிருமாக இருந்தாலும்; தமிழகத்தின் சில பிரச்சினைகளில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும். அதிலே ஒன்று, இருமொழிக் கொள்ளக; மற்றொன்று ‘நீட்’ வேண்டாமென்பது.
ஆளுதர் ரவி இதனை உணர்ந்து உரிய தகவலை மேலிடத்துக்குத் தந்து ஒட்டு மொத்தத் தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டும். அதனை விடுத்து இங்கே ‘பெரியண்ணன்’ மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால்,“கொக்கென்று நினைத்தாவோ கொங்கணவா..” எனும் பழங்கதை மொழியை அவகுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்; அதாவது, இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும் என்று முரசொலி கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.