Aran Sei

தென்பெண்ணை நீர் பங்கீடு: ’தீர்ப்பாயத்தை உருவாக்காமல் மோடி அரசு தமிழகத்திற்கு செய்யும் பச்சை துரோகம்’ – வைகோ கண்டனம்

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து ஒன்றிய அரசு முடிவெடுக்கலாம் என்ற பரிந்துரையில், ஓராண்டு காலம் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவெடுக்காமல் வைத்திருப்பது தமிழகத்திற்கு செய்யும் பச்சை துரோகம் என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (ஜூலை 03) வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்கம், நந்தி மலையில் ஊற்றெடுக்கும் நீர், ஒசகோட்டம், ஒரத்தூர் வழியாக தட்சிணப் பிணாசினி ஓடை, கொடியாளம் பகுதியில் தமிழகத்தைத் தொட்டு, தென்பெண்ணை ஆறாகத் தமிழகத்திற்கு உள்ளே 320 கிலோ மீட்டர் ஓடுகின்றது. கொடியாளம் தடுப்பு அணையைத் தாண்டி, ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரி மாவட்டம் வழியாக, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கு வந்து சேருகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

“பின்னர், விழுப்புரம் மாவட்டம் வழியாகச் சென்று கடலூரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது. இதற்கு இடையில், சுமார் இரண்டாயிரம் ஏரிகளை நிரப்பி, தமிழகத்தில் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகின்றது. தென்பெண்ணை ஆற்றில் தமிழகத்திற்கு வரும் ஒட்டுமொத்தத் தண்ணீரையும் தடுப்பதற்காக, கர்நாடக அரசு ஒரத்தூர் ஏரியில் மிகப் பெரிய நீரேற்று நிலையம் அமைத்து, அதன் மூலம் முழுத் தண்ணீரையும் ஒசகோட்டா ஏரிக்குத் திருப்பி, அங்கிருந்து கோலார் தங்கவயல், மாலூர் பகுதிகளில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும், குண்டூர், மானியங்கிரி, சிக்கத் திருப்பதி ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் கொண்டு செல்ல 2014இல் திட்டம் வகுத்தது.” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.

“பொது நலனில் மட்டுமே தனி மனிதர் நலன் காண முடியும்” – முதலமைச்சர் அண்ணாவின் முதல் உரை

இதற்கு முன்பே 2010இல் தென்பெண்ணை ஆற்றின் கிளையான மார்கண்டேய நதியின் குறுக்கே, தமிழக எல்லை ஓரத்தில் 50 மீட்டர் உயரத்திற்குத் தடுப்பணை கட்டும் திட்டத்தையும் தொடங்கியது என்றும் 1892ஆம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டங்கள் மற்றும் பாசன திட்டங்களுக்கு தமிழகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

“ஆனால், கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் இறங்கியபோது, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், வினீத் சரண் அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்து, 2019 நவம்பர் 14ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 1956ஆம் ஆண்டு நதிநீர் தாவா சட்டப்படி, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப் பங்கீடு மற்றும் நதிநீர் சிக்கல் குறித்து மத்திய அரசிடம் தீர்ப்பாயம் அமைக்குமாறு தமிழக அரசு கோராதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியது.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்

“தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்குத் தடை விதிக்குமாறு கோரும் தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி தமிழக அரசின் மனுவையும் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசு யார்கோல் எனும் இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதி மார்கண்டேய நதியின் குறுக்கே மத்திய அரசின் நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதியைப் பெற்று, ரூ.87.18 கோடி செலவில் அணை கட்டுமானப் பணிகளை முடுக்கிவிட்டது.” என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“தற்போது, கர்நாடக அரசு, பங்காருபேட்டையைச் சுற்றியுள்ள 45 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக 40 மீட்டர் உயரம், 414 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு அணையைக் கட்டி முடித்து விட்டதாக செய்தித்தாள்களில் செய்தி வந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் மார்கண்டேய நதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அணையால் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பயிர் சாகுபடிக்கு நீர்ப்பாசனமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகிவிட்டது.” என்று அவர் எச்சரித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

அதிமுக அரசின் அலட்சியப் போக்கால் தென்பெண்ணை ஆற்றிலும் காவிரியைப் போல உரிமையை தமிழகம் பறிகொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயம் அமைக்க தமிழக அரசு கேட்காதது ஏன் என்றும் கூறி, தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது என்றும் வைகோ கூறியுள்ளார்.

“எடப்பாடி பழனிசாமி அரசு காலம் கடந்து அரசுக்குக் கடிதம் எழுதி, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தென்பெண்ணை ஆற்றுச் சிக்கலுக்குத் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்குமாறு கேட்டது. ஆனால், மத்திய அரசு, 2020 ஜனவரி 20ஆம் தேதி மத்திய நீர்வளத்துறையின் தலைவர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து, பேச்சுவார்த்தை நடத்துமாறு பணித்தது. இக்குழுவில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர்கள், மத்திய வேளாண் துறையின் இணைச் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல் துறையின் இணைச் செயலாளர், நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹைட்ராலஜியின் இயக்குநர், மத்திய நீர்ப்பாசன மேலாண்மை அமைப்பின் தலைமைப் பொறியாளர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

‘மாநில உரிமைகளில் தலையிடும் புதிய கல்வி கொள்கை நுழையாமலிருக்க துறைசார் நடவடிக்கை’ – உயர்கல்வித்துறை அமைச்சர் உறுதி

“மத்திய அரசு அமைத்த இக்குழு, 2020 பிப்ரவரி 24 மற்றும் ஜூலை 7ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, 2020 ஜூலை 31ஆம் தேதி மத்திய அரசுக்குத் தனது அறிக்கையை அளித்தது. தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை என்பதால், ஒரு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கலாம் என்று பேச்சுவார்த்தைக் குழு பரிந்துரை செய்தது. ஆனால், ஓராண்டு காலம் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதில் முடிவெடுக்காமல் தமிழகத்திற்கு பச்சை துரோகம் இழைத்திருப்பது கண்டனத்திற்குரியது.” என்று அவர் கூறியுள்ளார்.

நீதிக்கான நீண்ட பயணம் – நிரபராதி என்று நிரூபிக்க 12 ஆண்டுகளை சிறையில் கழித்த காஷ்மீரி

“காவிரி உரிமையைத் தட்டிப் பறித்து, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்த மத்திய அரசு, தென்பெண்ணை ஆற்றுச் சிக்கலிலும் தமிழகத்தை வஞ்சித்து இருக்கின்றது. தென்பெண்ணை ஆற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி, 7.2.2018, 15.11.2019 ஆகிய இரு தேதிகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால், அதிமுக அரசு செயலற்றுக் கிடந்தது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக அரசு உடனடியாகச் செயல்பட்டு, மார்கண்டேய நதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் நீர் செல்லவிடாமல் தடுத்து, தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்