உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர் ராணா அய்யூப்பிற்கு மும்பை உயர்நீதி மன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பத்திரிகையாளர் ராணா ஐயூப் போலியான செய்தியை பரப்பி, சமூக அமைதிக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி அம்மாநில காவல்துறை அவர் மீது வழக்கு பதிந்திருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 5 அன்று, அப்துல் சமத் என்ற 72 வயது முதியவர், தொழுகைக்கு சென்றபோது அவரை தாக்கிய கும்பல், அவரது தாடியை மழித்தது. இந்த காணொளி இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த காணொளியை அவரது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்ததற்காக, கடந்த ஜூன் 15 அன்று காவல்துறை அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்திருந்ததாகவும், ஜூன் 16 அன்று தன் மீதான முதல் தகவல் அறிக்கை குறித்து தெரியவந்த பிறகு அந்த பதிவை நீக்கியதாகவும் உயர்நீதிமன்ற அமர்வு முன் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கைது நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும் வகையில் 4 வாரகால முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.
ராணா ஐயூப் தெஹல்கா பத்திரிக்கையில் பணிபுரிந்து வருவதாகவும், வாழ்நாளில் அதிகபட்ச எதிர்ப்புகளை சந்தித்துள்ளதாக டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ள 10 பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர் என்றும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.