12 ஆம் வகுப்புத் தேர்வில் 97% மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிக கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் வேறு வழியின்றி தனது மருத்துவ கனவை நனைவாக்கிட உக்ரைன் நாட்டிற்கு சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
“உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமலும் தங்களது மருத்துவ கனவு என்ன ஆகுமோ என்ற கவலையிலும் பெரும் இன்னல்களைச் சந்தித்து வரும் மாணவர்கள் குறித்து ஒன்றிய அரசு தெரிவித்து வரும் கருத்துக்கள் – ஒன்றிய அமைச்சர்களின் பேட்டிகள் – ஒன்றிய அரசுக்கு ஆதரவளிக்கிறோம் என சமூக வலைத்தளங்களில் போடப்படும் பதிவுகள் எல்லாம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்த போக்கினை உடனடியாக கைவிட்டு உக்ரைன் ரஷ்ய போரால் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி நாள்தோறும் உயிர் பயத்தில் தவித்து வரும் ஒவ்வொரு மாணவரையும் காப்பாற்ற வேண்டிய தன் கடமையை முனைப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு ஒன்றிய அரசு வரவேண்டும்.
இது “பரப்புரை” செய்வதற்கோ “விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ” உகந்த நேரமல்ல. உயிருக்கும் – தங்களது எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்ற வேண்டிய தருணம்.
அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அழைத்து வர வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் என்பதை நினைவூட்டுகிறேன்.
அதைவிடுத்து, இங்கு படிக்க முடியாமல் – வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவர்களின் ஆர்வத்தையும், அதற்காக கஷ்டப்பட்டு தங்களது சொத்துக்களை விற்று – சொந்த சேமிப்புகளை கரைத்து மேல் படிப்பிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்களின் உணர்வையும் கொச்சைப் படுத்தும் வகையிலான ஏட்டிக்குப்போட்டியான பேட்டிகளையும், கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என ஒன்றிய அமைச்சர்களுக்கும் – பாஜக விற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டியது அனைவருக்குமான பிரதமரின் மிக முக்கிய கடமையாகும்.
நீட்டுக்கு எதிரான போரில் தமிழ்நாடு வெல்லும் – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் உரை
நீட் நுழைவுத் தேர்வால் – மருத்துவ கல்வி ஏழை எளியவர்களுக்கு – நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாக்கனியாக ஆகிவிடும் ஆபத்தை போக்கவே, அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் ஒருமுகமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது அண்டை மாநிலமான கர்நாடகத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு. குமாரசாமி அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இன்னும் சில மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி – இந்திய அளவில் உள்ள அனைத்து மாணவர்களுக்காகவுமே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம். நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு இதற்கான ஆதரவைக் கோரி மாநில முதலமைச்சர்களும் “நீட் தேர்வு பாதிப்பு” தொடர்பான அறிக்கையை அனுப்பி ஆதரவு கோரினேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும், இப்போது மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ள “நீட் விலக்கு” மசோதாவும் இந்த அடிப்படை நோக்கத்தை முன்வைத்தே என்பதை உங்களின் போரில் மருத்துவம் படிக்கச் சென்று உயிரிழந்த மாணவர்களின் அவல நிலைமை துயர நிலைமை மீண்டும் உணர்த்துகிறது.
நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?
நீட் தேர்வை அறவே அகற்றி பள்ளிக்கல்வி மதிப்பெண்கள் மூலமாக மட்டுமே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக அரசும் தொடர்ந்து போராடி வருகின்ற சூழ்நிலையில் – தற்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
“உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவ கல்வி படிக்கப் போனார்கள்” என்று கேள்வி கேட்டு தர்க்கம் செய்வதற்கு ஏற்ற நேரமல்ல இது. மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும் உள்நாட்டில் மருத்துவ கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும். அந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்” என்று அந்த அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவுகள்:
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.