பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மூன்று நாட்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஆட்சி கடைபிடித்துவரும் மக்கள் விரோதக் கொள்கைகளின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் சுரண்டும் விதமாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு உயர்த்தி வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
எதிர்ப்பிற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான “மெல்லிய கோடு” – பத்ரி ரெய்னா
இந்நிலையில், பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்துவதென்று முடிவு செய்து உள்ளதாகவும், அதனடிப்படையில் வருகின்ற 28,29 ,30 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “கச்சா எண்ணெய்யின் விலையைக் குறைக்குமாறு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை ( OPEC) வலியுறுத்தும் பாஜக அரசு ஏழை எளிய நடுத்தர மக்களை வாட்டிவதைக்கும் விதமாகச் செஸ்(Cess) என்னும் கூடுதல் வரியை விதித்து பெட்ரோல் டீசல் விலையைச் செயற்கையாக உயர்த்திச் சுரண்டுவது ஏன்?” என்றும் அந்த அறிக்கையில் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
’என்னைக் கைது செய்ய அழுத்தம் தருகிறது அரசு’ – அசாம் முதல்வர் மீது அகில் கோகோய் குற்றச்சாட்டு
அதுமட்டுமல்லாது, கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டும்தான் ஒரே வழி என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். மக்களுக்குத் தடுப்பூசி கிடைப்பதை உத்தரவாதப்படுத்தாத பாஜக அரசு அந்தத் தடுப்பூசியிலும்கூட தமக்கு வேண்டிய தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் சம்பாதிக்க உதவி வருகிறது என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2014 முதல் உயர்த்தப்பட்ட கலால் வரிகளை பெருமளவு குறைத்து. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு மருந்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தைத் தடுப்பதோடு, அவற்றின்மீதான ஜிஎஸ்டி வரியை முற்றாக நீக்க வேண்டும் எனவும் ,செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ டெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தைத் தமிழ்நாடு அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் திருமாவளவன் கோரியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, “தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, போதுமான தடுப்பூசி மருந்துகளும், பேரிடர் கால நிவாரண நிதியும் வழங்க வேண்டும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், தொழில் முடக்கம், வேலையிழப்பு, வேலையின்மை மற்றும் வருமானத்திற்கு வழியில்லாத காரணங்களால் வாழ்வாதரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7500/= வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்களுக்கு வழங்க வேண்டும், மத்திய உணவுத் தொகுப்பிலிருந்து நபருக்குத் தலா 10 கிலோ வீதம் உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்க வேண்டும” என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
எனவே, மேற்கண்ட கோரிக்கைகளுக்காக இடதுசாரி கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து , மக்களின் நலன்களைக் காப்பதற்காக நடத்தும் இந்த ஆர்பாட்டங்களில் அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.