Aran Sei

சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்க – தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களைத் தமிழக அரசு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”  கலைஞர் அவர்களின் ஆட்சியின் போது பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் பதிவு மூப்பு முறையில் நடைபெற்று வந்தன. 2009, 2010 ஆம் ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களில் 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1258 பட்டதாரி தமிழாசிரியர்கள் இன்னும் பணிநியமனம் செய்யப்படவில்லை “. என்று கூறியுள்ளார்
மேலும், இவர்கள் வேலை பெறவிருந்த சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர், அதிமுக தலைமையிலான அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை நடைமுறைக்கு கொண்டுவந்தது என்றும், அதனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 5000 பட்டதாரி ஆசிரியர்களும் 1258 பட்டதாரி தமிழாசிரியர்களும் பணிநியமனம் பெற இயலாமல் பெரும் பாதிப்புக்குள்ளாயினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது, அவ்வாறு பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து (TET) விலக்கு பெற்றனர். ஆனாலும் இதுவரையில் அவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர் என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக பெரும் பாதிப்படைந்துள்ள 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1258 பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கு, உடனடியாகப் பணிவாய்ப்பு வழங்க வேண்டுமென்றும் திருமாவளவன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்