Aran Sei

மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

ராத்தா வகுப்பினருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு வழங்கிய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு தொடர்பாக மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாத்திட சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மராத்தா வகுப்பினருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியவோ, பட்டியல்படுத்தவோ, பட்டியலை மாற்றியமைக்கவோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை” என்று தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘நீட் தேர்வை ரத்து செய்ய பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்’ – திருமாவளவன் பரிந்துரை

மேலும், ஒன்றிய அரசு அரசியலமைப்புச் சட்டத்தில் புதிதாக பிரிவுகள் 338B, 342 Aஆகியவற்றைச் சேர்த்து 102வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியதற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட சாதிகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கும், குடியரசு தலைவருக்கும் மட்டுமே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதை எதிர்த்து ஒன்றிய அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் அதையும் நேற்று தள்ளுபடி செய்துள்ளதாகவும், இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்வதற்கு இனிமேல் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்றும் திருமாவளவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

அது மட்டுமின்றி, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மேல் செல்லக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இதன் மூலம் உறுதிப் படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, “சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது. மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும், சமூகநீதியைப் படுகொலை செய்யும் இந்தத் தீர்ப்பை மாற்றும் விதமாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண்டும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்