Aran Sei

`எங்களுக்கு இந்தி மொழியில் கடிதம் எதற்கு’ – சு.வெங்கடேசன் கேள்வி

மிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி மொழியில் பதிலளிப்பது சட்டவிதி மீறலாகும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 9-ஆம் தேதி, சி.ஆர்.பி.எஃப்  துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்க வேண்டுமென்று, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்க்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

நவம்பர் 9-ஆம் தேதி, அதற்கு அவரிடம் இருந்து இந்தி மொழியில் பதில் கடிதம் வந்துள்ளது. அக்கடிதம் இந்தி மொழியில் இருந்ததால் அதன் உள்ளடக்கம் குறித்து என்னால் அறிய இயலவில்லை என்றும் இந்தக் கடிதம் அக்கோரிக்கை குறித்ததாகவே இருக்கக்கூடுமென்று அனுமானிப்பதாக சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு நாள் : மாநிலத்தின் இறையாண்மையைக் காப்போம் – தோழர் தியாகுவின் சிறப்புக் கட்டுரை

இதுகுறித்து, அவர் உள்துறை இணை அமைச்சர்  நித்யானந்த ராய்க்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்தி மொழியில் பதில் தந்ததன் மூலம், சட்டம் மற்றும் நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

 

“1963 ல் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அலுவல் மொழியாக இந்தி திணிக்கப்படாது என அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு உறுதியளித்தது தாங்கள் அறிந்ததே. இப்பிரச்சினை மீது எழுந்த நாடு தழுவிய விவாதத்தில் பிறந்த கருத்தொற்றுமையின் விளை பொருளே நேரு அவர்களின் உறுதி மொழி. ”என்று மேற்கோள்காட்டியுள்ளார்.

மேலும், ”பின்னர் 1965 ல் தமிழகத்தில் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பின் புலத்தில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களாலும் இதே உறுதி மொழி திரும்பவும் வழங்கப்பட்டது. 1967 ல் அலுவல் மொழிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் மூலம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களாலும் இது உறுதி செய்யப்பட்டது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சு.வெங்கடேசனுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

1976 ஆம் ஆண்டு அலுவல் மொழி விதிகள் (இந்திய ஒன்றியத்தின் அலுவல் தேவைகளின் பயன்பாட்டிற்காக) – (1987, 2007, 2011 ஆண்டுகளில் திருத்தப்பட்டது) ஆவணத்தில் இருந்து சில பகுதிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தி எதிர்ப்பா? இந்தித் திணிப்பு எதிர்ப்பா? – பொள்ளாச்சி மா உமாபதி

இந்த விதிகள், அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவல் பயன்பாட்டிற்குரியது) விதிகள் 1976 என்று அழைக்கப்படும். இவை இந்தியா முழுமைக்கும், தமிழ்நாடு மாநிலம் தவிர, பொருந்தும்”

அதே விதிகளில்,  சி” பிரிவில் இடம் பெற்றுள்ள பகுதியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான மற்றும் அம் மாநிலங்களைச் சேர்ந்த, அலுவலகங்கள் (மத்திய அரசு அலுவலகங்கள் அல்லாதவை), தனி நபர்களுக்கான மத்திய அரசு அலுவலகங்களின் கடிதப் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும்.”

மேலும் , 01/12/2011 தேதியிட்ட மூல அரசாணை எண் 11013/4/2011 – அலுவல் சேவை (ஏ)- பிரிவு 5 (எக்ஸ்) ன் வரிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எப்பொதெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து ஆங்கிலத்தில் கடிதம் வரப்பெற்று அதற்கான பதிலை அலுவல் மொழிச் சட்டம் 1963 ன் அடிப்படையில், அதன் விதிகளின்படி, இந்தியில் தர வேண்டியிருந்தால், இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில், அதன் ஆங்கில மொழியாக்க வடிவமும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்.”

இந்தி தின கொண்டாட்டம் – கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு

உங்கள் செயலானது, இந்த அண்மைய அரசாணையை மீறுவது என்றும் இந்த அரசாணையே தொடர் மீறல்களைச் சரி செய்ய வெளியிடப்பட்டதே எனும் போது அதுவும் மீறப்படுகிறது என்றும் சு.வெங்கடேசன் கண்டித்துள்ளார்.

இறுதியாக, ”உங்கள் அமைச்சக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களைத் தந்து தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களுக்கு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்தும் வந்தது போன்றே, ஆங்கிலத்திலேயே பதில் தருவதை உறுதி செய்யுமாறு வேண்டுகிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்