Aran Sei

சட்டப் படிப்பில் நுழைவுத் தேர்வு : ‘சமூக நீதியை வேரோடு அறுத்தெறியும் செயல்’ – வைகோ கண்டனம்

முதுகலை சட்டப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயல்வது சமூக நீதிக் கோட்பாட்டின் ஆணி வேரையே அறுத்தெறியும் செயல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (ஜனவரி 10) மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக தலைவருமான வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீட் நுழைவுத்தேர்வால் இதுவரை நிகழ்ந்த உயிர்ப்பலிகள்

அதில், ”மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி காண நுழைவுத் தேர்வு ‘நீட்’ புகுத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்கள், பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மாணவர்களின் மருத்துவக் கனவைக் கானல் நீராக்கிய மத்திய பாஜக அரசு, தற்போது சட்டக் கல்வியிலும் சமூக நீதியை ஒழிக்க முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“முதுகலை சட்டப் படிப்புக்கு (LLM) இனிமேல் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும். முதுகலை சட்டப்படிப்பு எல்.எல்.எம். என்பது இரண்டு ஆண்டு படிப்பாக்கி, ஓராண்டு படிப்பு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் அறிவித்து இருக்கிறது.” என்று மேற்கோள்காட்டியவர், ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் சட்டம் பயின்று, முதுகலை சட்ட மேற்படிப்பு பயில்வதை முற்றிலுமாகத் தடை செய்திடும் வகையில் உள்நோக்கத்தோடு இந்திய பார் கவுன்சில் இந்த அறிவிப்புகளைச் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று வைகோ விமர்சித்துள்ளார்.

நீட் மரணங்கள் – கூட்டு மனசாட்சியின் தோல்வி – சீ.நவநீத கண்ணன்

சமூக நீதிக் கோட்பாட்டின் ஆணி வேரையே அறுத்தெறியத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் இத்தகைய செயல் கடும் கண்டனத்துக்கு உரியதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் மத்திய பாஜக அரசு, முதுகலை சட்டப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயல்வது ஏற்கத்தக்கது அல்ல என்றும் எனவே இந்திய பார் கவுன்சில் தனது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்