ஐஐடி முனைவர் பட்ட அனுமதியில் இட ஒதுக்கீடு குறித்தான தனது கேள்விக்குக் கல்வித் துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமலாவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (பிப்பிரவரி 9) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ஐஐடி முனைவர் பட்ட அனுமதிகளில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்க்கான இட ஒதுக்கீடுபற்றிய தான் எழுப்பிய கேள்விக்குக் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்துள்ள பதில் (கேள்வி எண்: 1058) அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
“முனைவர் பட்டக் கல்வியில் அனுமதிக்கப்பட்டுள்ள பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர், இதர பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை, அப்பிரிவுகளுக்குரிய இட ஒதுக்கீடு சதவீதங்களை விட மிகக் குறைவாக உள்ளது. இந்தியாவின் 23 ஐஐடி களில் மொத்தம் 7186 மாணவர்கள் 2020 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஓ.பி.சி மாணவர்கள் 1635 பேர், 707 பேர் பட்டியல் சாதியினர், 321 பேர் பழங்குடியினர் என ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பட்டியல் சாதி மாணவர்கள் சதவீதம் குறைந்த பட்சம் 15 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் முனைவர் பட்ட அனுமதிகளில் பட்டியல் சாதி மாணவர்களின் சதவீதம் 9.83 மட்டுமே. 15 சதவீதம் எனில் 1077 பட்டியல் சாதி மாணவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 370 இடங்கள் குறைவாக இருக்கின்றன. 23 ஐஐடி களில் கோவா, தன்பாத், ரூர்கி ஆகிய மூன்றைத் தவிர மற்ற 20 ஐஐடி களிலும் அனுமதிக்கப்பட்ட இப்பிரிவு மாணவர் எண்ணிக்கை, உரிய இட ஒதுக்கீடு சதவீதத்தை விடக் குறைவாக இருக்கிறது. சென்னை ஐஐடியிலும் 9.41 சதவீதம் மட்டுமே பட்டியல் சாதி மாணவர்க்கு இடம் கிடைத்துள்ளது. ” என்று அவர் கூறியுள்ளார்.
இட ஒதுக்கீடு விவகாரம் – பதிலளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
பழங்குடி மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் குறைந்த பட்சம் 7.5 சதவீத இடங்களைப் பெற வேண்டும் என்றும் ஆனால் 2020 ஆம் ஆண்டு 4.46 சதவீத பழங்குடி மாணவர்களே இடம் பெற்றுள்ளனர் என்று கல்விதுறை அமைச்சரின் பதிலை சு.வெங்கடேசன் மேற்கோள்காட்டியுள்ளார்.
“ஐஐடி மும்பை மற்றும் ரூர்கி தவிர மற்ற 21 ஐஐடி களிலும் உரிய சதவீதம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதில் மேலும் அதிர்ச்சி அளிப்பது என்னவெனில் காந்தி நகர் ஐஐடியில் 124 பேர் முனைவர் பட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலைமையில் ஒரு பழங்குடி மாணவர் கூட அதில் இல்லை. ரோபார் ஐஐடியில் 186 மொத்த மாணவர் அனுமதியில் ஒரு பழங்குடி மாணவர் கூட இல்லை. திருப்பதி ஐஐடி யில் 148 பேரில் ஒரு பழங்குடியினர் கூட இல்லை. பாலக்காடு ஐஐடியிலும் 146 பேரில் ஒரு பழங்குடியினர் கூட இல்லை. பழங்குடியினர்க்கான 15 சதவீதம் நிரப்பப்பட்டிருந்தால் குறைந்த பட்சம் 538 பேருக்குக் கிடைத்திருக்கும். ஆனால் 217 பேர் குறைவாக உள்ளனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடு குறைப்பு – திருமாவளவன் கடும் கண்டனம்
மேலும், “இதர பிற்பட்டோர் 27 சதவீதம் என்ற அளவில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தன்பாத், தார்வார், பாலக்காடு, திருப்பதி, வாரணாசி, இந்தூர், பாட்னா, ஹைதராபாத், புவனேஸ்வர் ஆகிய ஐ.ஐ.டிக்கள் தவிர மீத 14 ஐஐடிகளில் உரிய சதவீதத்தில் இதர பிற்பட்ட மாணவர்கள் அனுமதி பெறவில்லை. 1940 மாணவர்கள் இடம் பெற வேண்டிய நிலையில் 315 பேர் குறைவாக உள்ளனர்.” என்று சு.வெங்கடேசன் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“அமைச்சரின் பதில் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் அனுமதி) சட்டம் வரையறுத்துள்ள இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது ஒரு ஆண்டு கணக்குதான். ஒரு ஆண்டில் மட்டும் 902 இடங்களை ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இழந்திருக்கிறார்கள். இழந்ததே மொத்த இடங்களில் 13 சதவீதத்தை நெருங்குகிறது. ஓராண்டில் இவ்வளவை இழந்தால் கடந்த காலங்களில் எவ்வளவு பறி போயிருக்கும்? எதிர் காலத்தில் எவ்வளவு பறி போகும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த லட்சணத்தில் மத்திய கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ராம் கோபால் ராவ் தலைமையிலான நிபுணர் குழு மாணவர் அனுமதிகளில் இட ஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதுதான் வேதனையானது என்று சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
“அக்குழு முனைவர் பட்ட அனுமதிகளுக்கான முன் பயிற்சிக்கு ஆய்வு உதவியாளர் என்ற கல்விப் பிரிவை அறிமுகம் செய்யலாம் என்றும், அதைப் படிப்பவர்களுக்கு முனைவர் பட்டக் கல்விக்கான அனுமதி தருவதற்கு எந்த உத்தரவாதமும் இருக்காது என்றும் பரிந்துரைத்திருந்தது. அந்த அறிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரிப்பதாக அறிவிக்க வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமலாவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.