கோவையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலால் பள்ளி மாணவியின் தற்கொலைக்குக் காரணமான இயற்பியல் ஆசிரியர் மிதுன் சர்க்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியரின் தொடர் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து கோவையைச் சேர்ந்த புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட செயலாளர் பெரோஸ் பாபு அரண்செய் யிடம் பேசியபோது, “சின்மயா வித்யாலயா பள்ளிக்கு மேல்நிலை வகுப்பு நடத்துவதற்கான தர சான்றிதழ் இல்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர். அப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மிதுன் சர்க்கரவர்த்தி. அதேபளியில் +2 வகுப்பு படிக்கும் மாணவிக்குத் தொடர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் . இதைப் பள்ளி நிர்வாகத்திடம் மாணவி முறையிட்டபோது ‘பேருந்தில் போனால் உரசத்தானே செய்வாங்க. அதுபோல் நினைத்துக்கொள்’ என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் மனையியிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவியை கவுன்சிலிங் செய்துள்ளது. ஆசிரியரின் அத்துமீறல் அதிகமானதால் வேறு பள்ளிக்குப் இடம் மாறியுள்ளார்” என்று தெரிவித்தார்.
மாணவியின் தற்கொலை குறித்து அவரது தந்தை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றிவந்த மிதுன் சக்கரவர்த்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரிடமிருந்து தப்பவே பள்ளியில் இருந்து விலகியதாகவும், இருப்பினும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் தற்கொலைக்கு தூண்டுதல், பாலியல் தொல்லை அளித்தல் ஆகிய இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
‘கோவையில் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர்’ – தற்கொலை செய்து மாணவி உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியை கூறும்போது, கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் குடும்பத்தோடு மதுரைக்கு இடம்பெயர இருப்பதால், மாற்றுச்சான்றிதழ் கேட்டதாகவும், இரு நாட்களில், அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை என்றும், பள்ளி தாளாளரிடம் பேசாமல் எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில், மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.