ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் 14 ஆயிரம் ஊழியர்களின் எதிர்காலம்குறித்து தெளிவு இல்லாததால், டாடா சன்ஸ் குழுமத்திற்கு ஏர் இந்தியாவை விற்பனை செய்வதை நிறுத்துமாறு பிரதமர் மோடிக்கு 10 மத்திய தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன.
மேலும், ”பொது சொத்துக்களை விற்கும் கொள்கையை” திரும்பப் பெறுமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், தேசிய விமான போக்குவரத்து நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது தொடர்பாக நாட்டு மக்கள், குறிப்பாக ஏர் இந்தியா ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் ஏலத்தில் அதிகபட்ச தொகையான ரூ. 18 ஆயிரம் கோடிக்கு ஏலம் கோரி டாடா சன்ஸ் குழுமம் ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அக்டோபர் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஏர் இந்தியா ஊழியர்களை டாடா சன்ஸ் குழுமம் ஒரு ஆண்டுவரை பணியில் வைத்திருக்கும் என்று அரசாங்க தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.
ஏர் இந்தியாவை வஞ்சகமாக விற்பதன் மூலம், அரசாங்கம் அதன் தவறுகளை மறைக்க முயல்கிறது என கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புதிய உரிமையாளருக்கு ஏர் இந்தியாவின் நன்கு பயிற்சி பெற்ற பணியார்கள், 141 விமானங்கள், இந்திய விமானங்களில் 4,400 உள்ளூர் மற்றும் 1800 வெளிநாட்டு விமான பார்க்கிங் ஸ்லாட்கள், வெளிநாடுகளில் 900 பார்க்கிங் ஸ்லாட்கள் ஆகியன கிடைப்பதால், அவர்கள் சிறப்பான வழியில் லாபம் ஈட்ட முடியும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடனான கூட்டு நிறுவனமான விஸ்தாரா, குறைந்த கட்டண சேவை நிறுவனமான ஏர் ஏசியா ஆகிய நிறுவனங்களில் டாடா சன்ஸ் குழுமம் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ள நிலையில், ஏர் இந்தியாவையும் டாட்டா நிறுவனமே சந்தையைக் கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
”கடந்த ஆண்டு விமான போக்குவரத்து துறையின் மொத்த வருமான ரூ. 95,700 கோடியாக இருந்த நிலையில், ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா ஆகிய நிறுவனங்கள் மட்டும் சுமார் ரூ.40,500 கோடிக்கு வருமானம் ஈட்டியுள்ளன. அதாவது 42.31 விழுக்காடு சந்தை பங்குகளை இந்த மூன்று நிறுவனங்களும் பெற்றுள்ளன” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக டாடாவிற்கு விற்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் ஊழியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து ஏர் இந்தியா பொறியாளர்கள் மற்றும் பிற சங்கங்கள் ஒன்றிணைந்து நவம்பர் 2 ஆம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவுருத்தியுள்ளனர்.
”ஊழியர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கோருவதற்கு முன்னர், அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுவதுமாக அளிக்க வேண்டும். அவர்களின் விடுப்பு ஒதுக்கீடுகளை பணமாக மாற்ற வேண்டும் அல்லது புதிய நிறுவனத்திற்கு முன்னெடுக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை சங்கங்கள் முன் வைத்துள்ளன.
இந்தக் கடிதத்தில் இந்திய தொழிற்சங்க மையம், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம், ஹிந்த் மஸ்தூர் சபா, தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு, அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில், சுயதொழில் பெண்கள் சங்கம், தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவை கையெழுத்திட்டன.
Source : Scroll.in
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.