தமிழர் என்ற தேசிய இனமாகிய எங்களுக்கு எங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் சகல உரிமையும் உள்ளது என்றும் எங்களது இந்தப் பிறப்புரிமையைத் தொடர்ச்சியாக மறுதலித்து எங்களை அடக்கி ஆள்வதற்கே இலங்கை தேசம் விளைகின்றது என்றும் இலங்கையின் வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில், இலங்கை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் தொடங்கி, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிகண்டி வரை, நடைபெற்ற எழுச்சி பேரணியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உலகநாடுகள் நீதியை பெற்று தரவேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி, அரசியல் கைதிகள் விடுதலை, இஸ்லாமிய மக்களின் மத ம்பிக்கையான ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும், வடக்கு-கிழக்கில் காணி (நிலம்) விடுவிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (பிப்பிரவரி 7) இரவில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிகண்டியில் நிறைவுற்ற பேரணியின் முடிவில், இப்பேரணிக்கான கோரிக்கைகளை முன்வைத்து, அறிக்கை ஒன்று வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “இலங்கை பேரினவாத அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கைத்தீவு பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து விடுதலை அடைந்த காலம் முதல், ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி சாத்வீக முறை போராட்டங்களை மேற்கொண்டு வந்தோம். இப்போராட்டங்கள் வன்முறையினூடாக அடக்கப்பட்டதினால், ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் தேசிய ஆயுதப் போராட்டம் இலங்கை பேரினவாத அரசினால் கொடுங்கரம் கொண்டு மிகப்பெரும் மனிதப் பேரழிப்பினூடாக முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது என்றும் இந்த இறுதி யுத்தத்தின்போது இறுதி ஆறு மாதங்களில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். 2017ஆம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ITJP), தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட “பாலியல் வன்முறை முகாம்கள்” பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, தமிழர் தாயகத்தில் 90,000 க்கும் மேற்பட்ட யுத்த மூல விதவைகள் உள்ளனர்.” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “சிவில் நிர்வாகங்களில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுத்தல் உடனடியாக நிறுத்தப்படுவதுடன் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் உடனடியாக மாற்றப்படவேண்டும். மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், அதற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது அவர்களின் பேச்சுரிமை, நடமாடும் சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும்.” என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரியூட்டப்படும் உடல்கள் – இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்
“மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைக் காணிகளை (நிலங்களை) அபகரித்து சிங்களக் குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பில் உள்ள தமிழ்ப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களைத் திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன. இதன் ஒரு கட்டமாகத் தமிழ்ப் பூர்வீக நிலங்களில் வனங்கள் அழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்.” என்று அவ்வறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் பலரையும் கைது செய்து பலவருடங்களாகத் தடுத்து வைத்துள்ளனர். இஸ்லாமியச் சகோதரர்களையும் இதேபயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தி தற்போது தடுத்து வைக்கத்தொடங்கியுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுவதுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் யுத்த மற்றும் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: கூலி உயர்வு வேண்டி கடையடைப்பு
“இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாசாக்களைப் புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாசாக்களை இச்சிங்கள பெளத்த பேரினவாத அரசு எரியூட்டி வருகின்றது. இதற்கு எதிராகப் போராடும் முஸ்லீம் சமூகத்தையும் அடக்கி ஆள முனைகின்றனர். இந்நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு இஸ்லாமிய மக்களின் அடிப்படை மத உரிமை மதிக்கப்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளது.
மலையக தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக 1000 ரூபாய் சம்பள உயர்வு கேட்டுப் போராடி வருகின்றனர் என்றும் அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதுடன் அவர்கள் எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை கோரியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.