கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் ஏறத்தாழ 1௦௦௦ வழக்குகள் பதியப்பட்டது குறித்து ஒன்றிய அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 24, 2015 அன்று, இணையத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டால் கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழிற்நுட்பச்சட்டம் பிரிவு 66 எ, “தெளிவற்ற”, “அரசியலமைப்பின் படி அல்லாத” மற்றும் “சுதந்திரமான பேச்சுரிமைக்கு எதிரானது” என்றுக் கூறி நீக்கி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவதற்கு எதிராக அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமெனக் கோரி, மக்கள் உரிமைக்கான மக்கள் சங்கம் (பி.யூ.சி.எல்) உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சட்டபிரிவின் கீழ் பதியபட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவலை திரட்ட உத்தரவிட வேண்டுமெனவும் கோரி இருந்ததாக என்.டி.டி.வி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த சட்டம் நீக்கப்படும்போது 229 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது வரை 1,307 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், அதில் 570 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும்,இந்த சட்டப்பிரிவின் கீழ், மகாராஷ்டிராவில் 381 வழக்குகளும், ஜார்கண்ட்டில் 291 வழக்குகளும், உத்தரபிரதேசத்தில் 245 வழக்குகளும், ராஜஸ்தானில் 192 வழக்குகளும், ஆந்திராவில் 38 வழக்குகளும், அஸ்ஸாமில் 59 வழக்குகளும், டெல்லியில் 28 வழக்குகளும், கர்நாடகாவில் 14 வழக்குகளும், தெலுங்கானாவில் 15 வழக்குகளும், தமிழ்நாட்டில் 7 வழக்குகளும் மற்றும் மேற்கு வங்கத்தில் 37 வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.