ஏழு தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்ய தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (ஜூன் 04), புதுக்கோட்டையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியை நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது, 28 ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு தமிழர்கள் உட்பட 10 ஆண்டுகள் சிறைவாசம் கழிந்த ஆயுள் சிறைவாசிகளையும் குறிப்பாக சிறுபான்மை இஸ்லாமிய சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும், பாரபட்சம் பாராமல் தமிழக அரசு அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
“கடந்த காலத்தில் சிறைவாசிகள் விடுதலையில் நிகழ்த்தப்பட்ட பாரபட்சங்கள் கடந்து, மாநில அரசு தன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கருணை அடிப்படையில் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள், ஏழு தமிழர்கள் உட்பட 10 ஆண்டுகள் கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு கருணையின் அடிப்படையில் பாரபட்சம் பாராமல் விடுதலை செய்ய வேண்டும். பாரபட்மின்றி நெருக்கடிகள் இல்லாத பரோல் நடைமுறையையும் அவர்களுக்கு சாத்தியமாக்க வேண்டும்.” என்று நெல்லை முபாரக் அம்மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
அக்கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட சட்டத்துறை அமைச்சர், இக்கோரிக்கைகள் தொடர்பாக ஆவன செய்வதாக உறுதியளித்ததாக எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.