பத்ம சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) விவகாரத்தை சாதி பிரச்சனையாக மடைமாற்றும் நடவடிக்கை நடப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கே.கே.நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலும், பாலியல் துன்புறுத்தலும் செய்த வணிகவியல் (Commerce) ஆசியர் கே.கே.ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்திருந்தனர்.
மேலும், இவர்மீது பல்வேறு காலகட்டங்களில் புகார் அளிக்கப்பட்டாலும், பள்ளி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைடுத்து, பாலியல் சீண்டல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் கே.ராஜகோபாலனை கைது செய்த காவல்துறை, போக்சோ சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அப்பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்குப் பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
”இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறுசில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
”இந்தப் பிரச்சனையைக் குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச்சமூகமாக நம் அனைவரும் போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.