Aran Sei

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கு ஜன. 10 அன்று விசாரணை- உச்ச நீதிமன்றம்

பிரதமரின் பஞ்சாப் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்க ஒன்றிய அரசும், பஞ்சாப் அரசும் தனித்தனியாகக் குழுக்களை அமைத்துள்ளன. இந்த 2 குழுக்களும் வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை தங்களது விசாரணையை மேற்கொள்ள வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“ஜனவரி 5 அன்று விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தினால் பஞ்சாப் மாநிலத்தின் ஹுசைனிவாலாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கார் சுமார் 20 நிமிடங்கள் வரை சிக்கிக்கொண்டது. இதனால் ஏற்பட்ட “பாதுகாப்புக் குறைபாடு” காரணமாகப் பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக” உள்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

பிரதமரின் பஞ்சாப் பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களை வாங்கி பாதுகாக்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் அரசு, காவல்துறை அதிகாரிகள், பிரதமர் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் பிற ஒன்றிய மற்றும் மாநில ஏஜென்சிகள் ஆகியவற்றிடமிருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றப் பதிவாளர் அவர்களது பதிவுகளை வாங்கி பாதுகாக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

“பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு, எல்லை தாண்டிய பயங்கரவாதமோ என்ற அச்சத்தை எழுப்புகிறது. இது பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாகச் சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஒன்றிய, மாநில அரசியலுக்கு அப்பால் இதற்கான விசாரணை நடக்க வேண்டும்” என்று ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் மேத்தா கூறியுள்ளார்.

பிரதமர் திரும்பிச் சென்ற சம்பவம் “மிக மிக மோசமானது” என்று கூறிய பஞ்சாப் அரசு விசாரணைக்குத் தயார் என்று தெரிவித்துள்ளது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்