உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
நவம்பர் 9 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிக்கையின்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம், செப்டம்பர் 16 அன்று நடைபெற்ற கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றவும் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, கடந்த ஜனவரி 4 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டு இன்னும் ஓர் ஆண்டு கூட நிறைவடையவில்லை.
75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சஞ்ஜிப் பானர்ஜியை, மூன்று நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தோடு, இந்த இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கும் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் எழுதியிருந்தது.
நேற்று(நவம்பர் 15), இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மவுன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று(நவம்பர் 15), உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
வலுவான உத்தரவுகளுக்குப் பெயர் பெற்ற சஞ்ஜிப் பானர்ஜி, தமிழ்நாடு சட்டபேரவை தேர்தலில் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாததற்கு, தேர்தல் ஆணையத்தின்மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மற்றொரு வழக்கில், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sourse: PTI, New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.