கடந்த சில வருடங்களாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்குப் பிரதமர் அலுவலகம் தகவல்கள் மறுத்து அச் சட்டத்தின் விதிகளை மீறி வருவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோன்று, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்தின் பெயரை மாற்றம் செய்து சூட்டியதற்கு வந்த பரிந்துரைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களையும் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
மேலும், இந்தத் தகவலானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “தகவல்” என்ற வரம்புக்குள் அடங்காது என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர் தயான் சந்த்தின் பிறந்த நாளானது ஒவ்வொரு வருடமும் தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், தயான் சந்த்தின் பிறந்த நாள் அன்று சிறந்த விளையாட்டு ஆளுமைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா மற்றும் துரோணச்சாரி விருது வழங்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 அன்று ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்தின் பெயரில் பெயர்மாற்றம் செய்வதாக பிரதமர் அறிவித்திருந்தார்.
I have been getting many requests from citizens across India to name the Khel Ratna Award after Major Dhyan Chand. I thank them for their views.
Respecting their sentiment, the Khel Ratna Award will hereby be called the Major Dhyan Chand Khel Ratna Award!
Jai Hind! pic.twitter.com/zbStlMNHdq
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “நாடுமுழுதும் இருந்து எண்ணற்ற மக்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்தின் பெயரில் மாற்றம் செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். நான் அவர்களின் கருத்துகளுக்கு நன்றிக் கடன்பட்டவன்.” என்று குறிபிட்டிருந்தார்.
இந்நிலையில், பெயர்மாற்றம் குறித்து வந்த பரிந்துரைகள், அதுகுறித்த ஆவணங்கள், பரிந்துரைகளின் எண்ணிக்கைக் குறித்து தி வயர் செய்தி நிறுவனம் தகவல் அறியும் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், இந்த தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் “தகவல்” என்ற வரம்புக்குள் அடங்காது என்று கூறியுள்ளது.
மேலும், ஆர்.டி.ஐ சட்டம், 2005 பிரிவு 2 (எஃப்) ன் படி “தகவல்” என்பது பதிவுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், புத்தகங்கள், ஒப்பந்தங்கள் அறிக்கைகள், கோப்புகள், மாதிரிகள், செயல்விளக்கம், மின்னணு வடிவிலான தரவுப் பொருட்கள் உட்பட எந்த வடிவத்திலும் இருக்கலாம் என தெளிவாக பொருள் கூறுகிறது. மேலும், எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் இருக்கும் தகவல்களையும் , தற்போது நடைமுறையில் உள்ள வேறு எந்தச் சட்டத்தின் கீழும் பொது மக்களால் அணுக முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.