பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுக்கள் மீது பிப்ரவரி 25 ஆம் நாள் விசாரணை நடத்த இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக இஸ்ரேலுக்குச் சென்றிருந்தபோது, இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் நரேந்திர மோடிக்கு இடையே கையெழுத்தான 2 பில்லியன் டாலர் பாதுகாப்பு உபகரணம் தொடர்பான ஒப்பந்தத்தில், பெகசிஸ் உளவு செயலியும் இடம்பெற்றிருந்ததாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருந்த்து.
இந்த செயலியின் வழியே எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டது அம்பலமானது.
இஸ்ரேலிடம் இருந்து பெகசிஸ் உளவு செயலியை இந்தியா வாங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள குற்றச்சாட்டை விசாரிக்க வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், பரன்ஜோய் குஹா தாகூர்தா, எஸ்.என்.எம்.அபிதி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்ஸா சதாஷி உள்ளிட்டோர் சார்பிலும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இடைக்கால அறிக்கையையும் நிபுணர் குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறவிருந்தது.
இதனிடையே இந்த மனுக்கள் பிப்ரவரி 23-ம் தேதிக்குப் பதிலாக 25-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜராக உள்ள சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான மற்றொரு வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதால் வழக்கு பிப்ரவரி 25-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.