Aran Sei

’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்

நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமுதாயத்தில் வர்க்கம், சாதி, பாலினம், இடம் சார்ந்து பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன இதன் காரணமாக எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதன் காரணமாகவே இந்திய அரசியல் சட்டம் இடஒதுக்கீட்டை உறுதி படுத்தியிருக்கிறது. ஆனால் நீட் தேர்வு அத்தகைய நோக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. சமமான வாய்ப்பை பெற இயலாதவர்களை வாய்ப்பு பெற்றவர்களுக்கு இணையாக நிறுத்துகிறது. இது ஆரோக்கியமான போட்டியாக இருக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்

அரசு நீட் தேர்வை நிர்பந்தப்படுத்தியிருப்பதால் வேறுவழி இல்லாமல் எளிய பின்புலத்து மாணவர்களும் தங்கள் சக்திக்கு மேலான பொருட்செலவில் பயிற்சி மையங்களை நாட வேண்டியுள்ளது என்று கூறிய அவர், இதுவொரு நவீன வணிகம். பொறுப்புள்ள அரசு, இத்தகைய நவீன கொள்ளையை அனுமதிக்க கூடாது எனவும், மாணவர்களின் ஆற்றலை பயிற்சி மையங்களின் வணிக விதிகள் முடிவு செய்திட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்”தமிழகத்தில் நிலவும் சுகாதார கட்டமைப்பு இந்திய மாநிலங்களில் இல்லாதது. இந்த நிலை நீட் தேர்வு இல்லாத நிலையிலேயே சாத்தியப் பட்டிருக்கிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறோம். கிராமப்புறம் மற்றும் விளிம்பு நிலை மாணவர்களை கணக்கிலெடுக்கமால் இந்தியா முழுமைக்கும் ஒற்றை தேர்வு என்கிற முடிவு சமூக நீதியல்ல. சட்டம், நீதி, அரசாங்கம் என யாவும் அனைத்து மக்களுடைய மேம்பாட்டிற்கானது என்பது உறுதி செய்யப்பட வேண்டுமானால் அடிப்படை கல்வி சட்டபூர்வமாக்கப்பட வேண்டும். எல்லா தரப்பினரையும் கணக்கில் கொண்டே எதிர்வரும் காலத்தில் கல்வி சீரமைப்பு உறுதி செய்யப்பட வேண்டும்” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்

ஏற்றத்தாழ்வு கொண்ட இச்சமூக அமைப்பில் தேவைக்கேற்றார் போல் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மொழி, கலாச்சாரம், தொழில் உள்ளிட்டவற்றில் பன்முகத்தன்மை நிலவும் நாட்டில் ஒரே கல்வி என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
இதனை மாற்றுவதற்கான ஒரே வழி கல்வி, பாடத்திட்டம், தேர்வு சார்ந்த விசயங்கள் மாநிலப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதையும் இத்தருணத்தில் வலியுறுத்துவதாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கல்வி என்பது மனத்தடைகளை அகற்றி தன்னம்பிக்கையையும் சமூக விடுதலையையும் அடைவதற்கான கருவி. மாறாக சோர்வையும் பயத்தையும் கொடுப்பதாக மாறிவிட்டது. பெற்றோர்களின் துயரத்தில் பங்கெடுக்க முடியாமல், அவர்களது கேள்வியில் உள்ள நியாயத்திற்கு பதிலளிக்கவும் முடியாமல், தடுமாற்றத்தோடு கழியும் இந்தக் காலம் நிறைவு பெற்றாக வேண்டும்.

தமிழ் வழி மற்றும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்த வேண்டுமென்பது அவர்களுக்கான உரிமை. இச்சூழலில் புதிய பாடதிட்டங்களையும் தேர்வுகளையும் அறிமுகப்படுத்துவது மாணவர்களை குழப்பத்திற்குள் தள்ளும். தமது ஆற்றல்மீதான கேள்விகளும் தாழ்வு மனப்பான்மையும் மேலெழும்.எனவே காலதாமதமின்றி இவை கருத்தில் எடுக்கப்பட்டு களையபட வேண்டும் என்றும் வலியிறுத்தியுள்ளனர்.

நீட் உருவாக்கக்கூடிய தாக்கம்குறித்த ஆய்வறிக்கையை தயார் செய்யும் பணியில் ஓய்வு பெற்ற நீதிபதி மதிப்பிற்குரிய ஏ. கே. ராஜன் அவர்களது தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதை செய்த தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைகள் போற்றுதலுக்குரியது என்று தெரிவித்த  பா.ரஞ்சித், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கும் அதே வேளையில் கால தாமதம் இல்லாமல் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர்

பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், திரைத்துறையினர், கலை இலக்கிய செயல்பாட்டினர், சமூக ஆர்வலர்கள் என யாவரும் ஒன்று திரண்டு நம் கருத்துகளை தெரிவிக்கவேண்டும் எனவும்,  [email protected] என்கிற முகவரிக்கு நீட் தேர்வின் பாதிப்புகளை மின்னஞ்சல் செய்ய வேண்டும் எனவும், வரும் 23ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

”நவீன இந்தியாவென்பது தொழிற்நுட்பக்கருவிகளை டிஜிட்டல் மயமாக்குவதன்று. மாறாக சமூக விடுதலைக்கான வழியை கடந்த காலத்தை விடவும் ஆக்கபூர்வமாக செயல்படுத்தி நம்மை மேம்படுத்திக் கொள்வதேயாகும். மாணவர்களின் சமூக, கல்வி விடுதலைக்கு துணை நின்று, சனநாயகத்தை வளர்த்தெடுக்க தமிழ்நாட்டு அரசை முழு மனதார நம்பி இம்மனுவை தங்களின் முன் வைக்கிறோம்.” என்று நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்