மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இன்று (பிப்பிரவரி 08) அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதியைச் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
மருத்துவ இடஒதுக்கீடு: ’தமிழக மாணவர்கள் மீதான வெறுப்பை பாஜக கைவிட வேண்டும்’ – ஸ்டாலின்
சமூகநீதியின் அடிப்படையான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசு, மண்டல் கமிஷன் தீர்ப்பின்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசின் ஒரே ஒரு துறையில் கூட முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பட்டியலின – பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டையும் புறக்கணித்து – மத்திய அரசின் துறைகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும், பட்டியலின – பழங்குடியினத்தவருக்கு இடமில்லை என்ற எழுதப்படாத உத்தரவினை வேகமாகச் செயல்படுத்தி வருவது நாட்டின் சமூகநீதிக் கட்டமைப்பையே உருக்குலைக்கும் செயலாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடஒதுக்கீடு விதிமீறிய உயர்கல்வித்துறை செயலர் : பதவி நீக்க வலியுறுத்தும் வேல்முருகன்
“புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, வங்கித் தேர்வுகள், யூபிஎஸ்சி தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், தபால் தந்தி இலாகா உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளுக்கு நடைபெறும் பல்வேறு தேர்வுகள் ஆகியவற்றில், ஏற்கெனவே சமூகநீதிக்குச் சாவுமணி அடித்து, போதாக்குறைக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மின்னல் வேகத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து, இந்நாட்டின் நிர்வாகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்க உரிமையில்லை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
“இந்திய வரலாற்றில், சமூகநீதிக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் முற்றிலும் எதிரான இப்படியொரு அரசு இப்போது பாஜக தலைமையில் அமைந்திருக்கிறது என்பது, நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் கேடு. இதன் அடுத்தகட்டமாகவே, தற்போது இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களிலிருந்து ஆட்களை, அதுவும் பாஜக – ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்களை மத்திய அரசின் துறைகளுக்கு அழைத்து வந்து, எஞ்சியிருக்கும் சமூகநீதிக் கட்டமைப்பையும் தகர்க்க, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?
“தனியார் துறையிலிருந்து நியமனம் செய்யப்படும்போது இடஒதுக்கீட்டுக் கொள்கை தூக்கி எறியப்படும். அப்படி நியமிக்கப்படுவோர் அவர்களின் சித்தாந்தத்தில் உள்ளவர்களை அரசுத் துறைகளில் சேர்த்து விடுவார்கள். பத்து சதவீத இடஒதுக்கீடு போதாது என்று இப்படிக் குறுக்கு வழியிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் சீரழிக்க நடக்கும் இந்த முயற்சிகளைத் திமுக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இது கார்ப்பரேட் ஆட்சி என்பதால், பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்ப்பு என்று தொடங்கி, அது பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், மத்திய அரசின் துறைகளையும் தனியார்மயமாக்கும் இந்த முடிவு அரசியல் சட்டத்திற்கே விரோதமானது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு அலுவலகங்களில் தப்பித் தவறி பணியில் அமர்த்தப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின அலுவலர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உயர் பதவிகளை எட்டாக் கனியாக்கி, அனைத்திலும் முன்னேறிய வகுப்பினரும் கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டியவர்களும் ஆக்கிரமித்துக் கொள்வதற்கே வழி வகுக்கும்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.
ஐஐடி களில் இடஒதுக்கீடு ரத்து : அறிக்கையைக் குப்பையில் எறியுங்கள் – சு. வெங்கடேசன்
“மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர் போன்ற பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களிலிருந்து நியமனம் செய்யும் முடிவை உடனடியாக மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்றும், அனைத்துத் துறைகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின, பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன். அதைச் செய்யத் தவறினால், வரலாறு நிச்சயம் மன்னிக்காது.” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய அரசு நிர்வாகம் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமை என்பதை மத்திய பாஜக அரசு உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற மறுப்பதும், அதற்கு எதிராக நடப்பதும், எரிமலையுடன் விளையாடுவதற்கு ஒப்பானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘தமிழ்வழி கல்வி பெற்றவர்களுக்கான இடஒதுக்கீடு நிறுத்தம்’ – வேல்முருகன் குற்றச்சாட்டு
மத்திய பாஜக அரசு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கருதினால், இதுகாறும் கடைப்பிடித்து வந்த அணுகுமுறையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் மட்டுமின்றி, சமூகநீதி காக்கப் போராடும் அனைவரது சார்பிலும் எச்சரிக்க விரும்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.