வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி, மே 26 ஆம் தேதியைக் கறுப்பு தினமாக அனுசரிக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு மனிதநேய கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்திய ஒன்றிய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் வருகின்றனர்.
போராட்டம் தொடங்கிய ஆறு மாதம் நிறைவடைவதை உணர்த்தும் வகையில் மே 26 தேதி கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதன்படி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள், மே 26 ஆம் தேதி தங்கள் வீடு, அலுவலகம், வாகனம் ஆகியவற்றில் கறுப்பு கொடி ஏற்றி ஆதரவு தெரிவிக்குமாறு விவசாயி சங்கத்தினர் வலியுறுத்தினர்.
நாடு முழுவதும் நடைபெற இருக்கும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தற்போது மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். எம்.எச்.ஜவஹிருல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் 6 மாதங்களாகப் போராடியும், மத்திய பாஜக அரசு பிடிவாதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.” என குற்றம்சாட்டியுள்ளார்.
“மின்சார திருத்தச் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள்மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய மக்கள் விரோத, சட்டைகளை மத்திய அரசு இயற்ற நடவடிக்கை எடுத்து வருவதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
”வரும் 26-ம் தேதியுடன் மோடி பிரதமராகப் பொறுப்பேற்று 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மத்திய பாஜக ஆட்சியால் மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே மே 26-ம் தேதியைக் கறுப்பு தினமாக கடைப்பிடிக்க அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றும் போரட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளித்து மனிதநேய மக்கள் கட்சியினரின் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி இந்த மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பை வெளிபடுதுவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவஹிருல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.