Aran Sei

‘எம்.பி நிதிக்கு தடுப்பு மருந்தை மறுத்த ஒன்றிய அரசு’ – மக்களுக்கு செய்யும் துரோகமென சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

னியாருடன் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு தடுப்பூசியினை சிறப்பு ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என்பதை போன்ற மக்கள் விரோத செயல் வேறெதுவுமில்லை என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 29), அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “சுகாதாரத் துறை அமைச்சர் மரு. ஹர்ஷ வர்த்தன் அவர்களுக்குக் கடந்த 13 ஆம் தேதி நான் கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். அதற்குச் சுகாதாரத் செயலாளர் இப்பொழுது பதில் ஒன்றினை அனுப்பியுள்ளார். எனது கடிதத்தில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 30,000 இளைஞர்களை கோவிட் எதிர்ப்பு களத்தில் தன்னார்வ தொண்டர்களாக ஈடுபடுத்த திடடமிட்டிருப்பதையும்,  அவர்களுக்குக் களத்திற்கு செல்ல ஏதுவாக தடுப்பூசி போடுவதற்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 1 கோடியை ஒதுக்குவதாகவும், அதற்கான தடுப்பூசிகளை அளித்து உதவுமாறும் கோரியிருந்தேன்.” என்று நினைவூட்டியுள்ளார்.

“தடுப்பூசி தாருங்கள், நாங்கள் தன்னார்வலர்களை தருகிறோம்” – சுகாதாரத்துறைக்கு சு.வெங்கடேசன் கடிதம்

“மத்திய சுகாதார செயலாளர் கடிதமும் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் கோவிட் எதிர்ப்பு களத்தில் நாங்கள் ஆற்றுகிற பணியையும், அளிக்கிற ஒத்துழைப்பையும் பாராட்டியே துவங்கியுள்ளது. இந்த கள அனுபவத்தில் இருந்தே அனுபவம் மிக்க பலரையும் கலந்தாலோசித்து “சமூக பங்கேற்பை” (Community Participation) உறுதி செய்கிற வகையில்தான் ஓர் நேர்த்தியான திட்டமிடலை முன் வைத்தேன். குடியிருப்பு பகுதியில் முதியோர் பராமரிப்பு, கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ளவர்களுக்கு உதவி, அவசர மருத்துவ தேவைகளுக்கு வாகனம், தனிமைப் படுத்தப்பட்டவர்க்கு உணவு ஏற்பாடு போன்றவற்றிற்கு இந்த தன்னார்வ இளைஞர்கள் பெரும் பங்களிப்பை தர இயலும். இளைஞர்களின் ஆற்றல் நேர் மறையாக பயன்படும். இவ்வளவு கனவுகளோடு முன் வைக்கப்பட்ட திட்டத்திற்கு சுகாதாரத் துறைச் செயலாளர் தந்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை தருகிறது.” என்று சு.வெங்கடேசன் கவலை தெரிவித்துள்ளார்.

“விலை தாராளமயம் மற்றும் கோவிட்-19 தேசிய தடுப்பூசி பரவல் திட்டத்தைக் குறிப்பிட்டு நேரடியாக தடுப்பூசியை தர இயலாது என தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கும், தனியார் மருத்துவ மனைகளுக்குமே தருவதற்கே அக்கொள்கையில் வழி வகை உள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு வகுத்துள்ள தடுப்பூசி கொள்கையை அதன் விலை நிர்ணய முறையை அடிப்படையிலேயே நாங்கள் ஏற்கவில்லை. மூன்று விலை, மாநில அரசுகளுக்குக் கூடுதல் சுமை, தனியார்களின் நேரடி கொள்முதல் ஆகியனவெல்லாம் ஒரு பேரிடர் காலத்தில் மக்கள் நலன் நாடும் அரசாங்கம் செய்யத் தக்க செயல்கள் அல்ல.” என்று தனது அறிக்கையில் அவர் விமர்சித்துள்ளார்.

‘கொரோனா மருந்துகளுக்கான வரிவிலக்கை பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டும் எதிர்க்கின்றன’ – டெல்லி அரசு குற்றச்சாட்டு

“எல்லோருக்கும் இலவச தடுப்பூசி, காப்புரிமை சட்டத்தில் இருந்து விலக்கு, உற்பத்தியை ‘கட்டாய உரிமம்’ வாயிலாக விரிவு படுத்துவது, பட்ஜெட் ஒதுக்கீடான ரூ 35000 கோடியை முழுமையாக பயன்படுத்துவது, பி.எம்.கேர் நிதியைத் திருப்பி விடுவது உள்ளிட்ட பல கருத்துக்களை நானும், எனது கட்சியும், எதிர்க்கட்சிகளும், நிபுணர்களும் முன் வைத்து வருகிறோம். ஆனால் அதற்கெல்லாம் உரிய நடவடிக்கை இல்லை. மக்களின் உயிர் வாதை உலுக்குகிற வேளையில் கூட உலக மயப் பாதையை விட்டு விலகமாட்டேன் என்கிற அரசின் நிலைப்பாடு ஆழ்ந்த வேதனை தருகிறது.” என்று சு.வெங்கடேசன் தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.

“நிரந்தர நீண்ட காலத் தீர்வுகளுக்கும் அரசின் கதவுகளும், காதுகளும் திறக்காது. உடனடி களத் தேவைகளுக்கும் திறக்காது என்றால் என்ன செய்வது? மதுரை கோவிட் எதிர்ப்பு களத்திற்கு நான் முன் மொழிந்துள்ள திட்டம் தடுப்பூசி கொள்கையையும் கடந்தது. விரிந்த வியூகத்தின் ஒரு பகுதி. நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் முன் மாதிரியாய் அமலாக்கி பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யலாம் என்ற திறந்த மனதோடு அணுகப்பட வேண்டிய ஆலோசனை. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியும் மத்திய அரசு நிதியின் ஒரு பகுதிதான் என்ற எளிய உண்மையைக் கூட மேற்கண்ட கடிதம் கணக்கிற் கொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘பற்றாக்குறையால் பூட்டப்பட்டுள்ள தடுப்பு மருந்து மையங்கள் குறிக்கோளற்ற தடுப்பு மருந்து கொள்கைக்கு சான்று’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

“தனியார்கள் கூட நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு தடுப்பூசியினை சிறப்பு ஒதுக்கீடு செய்யமாட்டோம் என்பதை போன்ற மக்கள் விரோத செயல் வேறெதுவுமில்லை. உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். கொள்கையில் மாற்றம் கொண்டு வாருங்கள். நல்ல முடிவை நானும் எனது தொகுதி மக்களும் எதிர் பார்க்கிறோம்.” என்று சு.வெங்கடேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்