Aran Sei

விவசாயிகளுக்கு ஆதரவாகத் தொடர் போராட்டம் -தமிழக இடது சாரி கட்சிகள்

Image Credits: India Today

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரியும் டிசம்பர் 4-ம் தேதி முதல் தமிழக இடது சாரி கட்சிகள் சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கிய பேரணி) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  இந்தப் போராட்டம் இன்று 6 வது நாளாக நீடித்து வருகிறது. விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக இடது சாரி கட்சிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

’தில்லி சலோ’ : தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்

 

அந்த அறிக்கையில், “மத்திய பாஜக அரசு கொரோனா தொற்றுப் பரவல் காலத்தைப் பயன்படுத்தி  அவசர கோலத்தில் ஜனநாயக விரோதமாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமல் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்

 

“வரலாற்றில் இல்லாத அளவு லட்சக்கணக்கான விவசாயிகள் பல மாநிலங்களிலிருந்து சென்று டெல்லியில் முகாமிட்டுள்ளனர். வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்திருத்த முன்வடிவையும் திரும்பப் பெற கோரி நடைபெறும் நியாயமான எழுச்சிமிக்க போராட்டத்தினை இடது சாரி கட்சிகள் ஆதரிப்பதோடு அவர்களோடு இணைந்து களத்தில் நின்று போராடி வருகின்றனர்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து தீர்வு காண்பதற்கு மாறாக, மோடி அரசு விவசாயிகள் மீது கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. டில்லி நகரத்திற்குள் நுழைய விடாமல் பாஜக அரசின் காவல்துறையும், துணை ராணுவப்படையும் தொடுக்கும் தாக்குதல்களையும், தடைகளையும் எதிர்கொண்டு விவசாயிகள் டெல்லியைச் சுற்றி முகாமிட்டு போராடி வருகின்றனர்” என்று இக்கட்சிகள் கூறியுள்ளன.

“விவசாயிகள் மீதான தாக்குதல் பாஜகவின் வன்முறை வெறியாட்டம்” – தொல்.திருமாவளவன்

 

“இது விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் சிதைக்கும் வகையில் உள்ளது. விவசாய உற்பத்தி பொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கி பெருமுதலாளிகளிடமும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிறு-குறு, நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலத்தினை இழக்க வழிவகுக்கும் வகையில் உள்ளது. இதனை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று இடது சாரி கட்சிகள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மோடி அரசு நிறைவேற்றியுள்ள இச்சட்டங்களை, விவசாயம் மாநில பட்டியலில் உள்ள ஒன்று என்பதை பற்றிக் கூடச் சிறிதளவும் கவலைப்படாமல், அதிமுக அரசு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஆதரித்துள்ளது மட்டுமின்றி, உடனடியாகத் தமிழக சட்டமன்றத்திலும் நிறைவேற்றித் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மாபெரும் துரோகத்தினை இழைத்துள்ளது” எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

’எங்களுக்குள் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி’ – பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த விவசாயச் சங்கம்

 

“இந்நிலையில், விவசாயிகளின் பேரெழுச்சி மிக்க போராட்டத்திற்கு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் வகையிலும், போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் 2020-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு தொடர்ச்சியான மறியல் போராட்டம் நடத்துவது என சிபிஎம், சிபிஐ மற்றும் எம்எல் லிபரேசன் ஆகிய இடது சாரி கட்சிகள் தீர்மானித்துள்ளன” என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

“இவ்வியக்கத்தில் தமிழக விவசாய பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும், உழைப்பாளி மக்களும், ஜனநாயக சக்திகளும் பெருந்திரளாகப் பங்கேற்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கோரிக்கைகளை எழுப்பிட வேண்டுமென இடது சாரி கட்சிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்