முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கேரள அரசு கட்டப்போகும் புதிய அணைக்கு தமிழ்நாடு அரசு துணை போகக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிடும் சதி திட்டத்தை மூடி மறைத்து புதிய அணை கட்டப் போவதாக கூறும் கேரள அரசின் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாடு அரசு துணைபோகக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீர்பாசனத்திற்கு ஆதாரமாக விளங்குகின்ற முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எப்படியாவது குறைக்க வேண்டும் அல்லது முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் அல்லது முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும். இது தான் கேரளா அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த நிலைப்பாடு.
குறிப்பாக, இந்திய தேசியம் பேசும் காங்கிரஸ், பாஜக, சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், கேரள மக்களிடையே இனவெறியைத் தூண்டி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க முயலுகிறது.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில், அணை வலுவாக உள்ளதால் 142 அடிவரை நீரைத் தேக்கலாம், பின்னர் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.
ஆனால், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானதல்ல என பொய் பரப்புரை தொடர்ந்து மேற்கொண்டு வரும் கேரள அரசு, இது குறித்த அறிக்கை ஒன்றை சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் தான், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்து, அடுத்த மாதம் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் நடராஜன் மறைவு – தலைவர்கள் அஞ்சலி
அதாவது, முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிடும் சதி திட்டத்தை மூடி மறைத்து, புதிய அணை கட்டப் போகிறோம் என்பதே இந்த பேச்சுவார்த்தைக்கான கேரள அரசின் முக்கிய நோக்கம் ஆகும்.
இவ்விவகாரத்தில் கேரள அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்தைக்கு செல்லக்கூடாது என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்தாகும். அப்படி பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசு பங்கேற்றாலும், கடந்த கால கற்பித்தங்களில் இருந்து பாடம் கற்று, கவனமாக செயல்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
முக்கியமாக, முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக நிபுணர்கள் கூறி வந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை உடைந்து 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் மிதப்பது போல் மோசடியாக பரப்புரைக் குறுந்தகடு தயாரித்து கேரளத்தில் ஊர் ஊராக போடச் செய்தவர் முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் அச்சுதானந்தன்.
பின்னர், அந்த புரளியை ஒரு திரைப்படமாகத் தயாரித்து டேம் 999 என்ற பெயரில் பல மொழிகளில் வெளியிட துணை புரிந்தது கேரள அரசு தான்.
இந்த வரலாற்றுக் காரணங்களை கருத்தில் கொண்டு தான், கேரள அரசுடான பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசு பங்கேற்க வேண்டும். இல்லையென்றால், அவர்களின் ஆசை வார்த்தைக்கும், சூழ்ச்சிக்கும் நாம் துணை போக நேரிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எடுத்துரைக்கிறது.
இது ஒருபுறமிருக்க, சுமார் 30 லட்சம் கேரளாக்காரர்கள் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறார்கள். அவர்களை எங்களின் சகோதரர்களாக தான் பார்க்கிறோம். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்களுக்குரிய உயர் பதவிகளையும், வருமானம் அதிகமுள்ள வணிகங்களையும், தொழில்களையும் கைப்பற்றி உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து அரிசி, கேரளம் முழுவதுக்குமான இறைச்சி, காய்கறிகள், பழங்கள், முட்டைகள், பால் உள்ளிட்டவை கேரளாவுக்கு போகின்றன.
பொய் வழக்குகள், காவலில் வன்முறை: ஸ்டான் சுவாமிகளை உருவாக்குகிறதா கேரளா?
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மின்சாரம் ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட். இத்தனை வழிகளில் கேரளம் தமிழ்நாட்டைச் சார்ந்து இருக்கிறது. ஆனால் இதற்கான நன்றி உணர்ச்சி எதுவும் கேரளாக்காரர்களிடம் இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.