Aran Sei

நீக்கப்பட்ட அண்ணா, காமராசர் பெயர்கள்: ‘தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல்’ – ஜவாஹிருல்லா கண்டனம்

மிழகத்தின் பெரும் தலைவர்கள் காமராஜர் மற்றும் அண்ணா ஆகியோரை அவமதிக்கும் வகையில், அவர்களது பெயர்களை சென்னை விமான நிலைய முனையங்களில் இருந்து மத்திய அரசு நீக்கி இருப்பது, தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (பிப்பிரவரி 11) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது தொடங்கி இன்றுவரை, தமிழ் மொழி மீதும், தமிழ் இனம், கலை, கலாச்சாரம் மற்றும் தமிழினம் போற்றும் தலைவர்கள் மீதும் தொடர் தாக்குதல்களையும், அவமதிப்புகளையும் செய்துகொண்டே வருகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“இதில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிப்பு, ஜல்லிக்கட்டுக்குத் தடை, பொங்கல் பண்டிகை விடுமுறை ரத்து, செம்மொழித் தமிழாய்வு மையத்தை மூடும் முயற்சி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு உள்ளிட்டவை சில எடுத்துக்காட்டுகளாகும்.” என்று ஜவாஹிருல்லா பட்டியலிட்டுள்ளார்.

தற்போது மோடியின் பாஜக அரசு, கல்விக் கண் திறந்த காமராஜர்  மற்றும் சமூக நீதிக்கும், சாதி ஒழிப்பிற்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த அண்ணா  ஆகியோரை அவமதிக்கும் வகையில் இவர்களது பெயர்களை சென்னை விமான நிலைய முனையங்களில் நீக்கி இருப்பது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கத் தோன்றுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன்’ – பேரறிஞர் அண்ணா

“மத்திய அரசின் இந்த இருட்டடிப்புச் செயலானது, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமின்றி, தமிழ் இனத்தின் மீதான பாசிசத் தாக்குதல் ஆகும். இதுகுறித்து, நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் குரல் எழுப்பி, மீண்டும் இருபெரும் தலைவர்களின் பெயர்களை பழையபடியே சென்னை விமான நிலையத்திற்கு சூட்டுவதற்கு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.” என்று ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்