கொரோனாவை காரணம் காட்டி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முடக்கப்பட்டிருப்பதால், நம் வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் என்று யாழ்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறைகூவலை முன்வைத்துள்ளது.
அத்துடன், இன்று மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்பி, நம் வீட்டு முற்றங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இன்று (மே 18), அனுசரிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில், “இன்று மே 18. தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளாகும். தமிழ் மக்களைக் கொடூரமாக அழித்ததோடல்லாமல் நமது நினைவையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவுகூரலை நாங்கள் எதிர்கொள்கின்றோம். எமது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீள அமைக்க வழிவிட்டது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இப்போது வருடாவருடம் எமது மக்கள் பொங்கும் உணர்வுகளோடு முள்ளிவாய்க்கால் வந்து அழுது ஆறிச்செல்லும் நினைவுச்சுடர் தூபியை அரசு மிலேச்சத்தனமாக அழித்ததோடு நினைவுகளையும் வஞ்சகமாகக் கவர்ந்து சென்றுள்ளது. மேலும், கோவிட்டை காரணம் காட்டி முல்லைத்தீவு பகுதியை முடக்கி நாம் எந்தவிதத்திலும் முள்ளிவாய்க்காலை அணுக முடியாதபடி அரச தரப்பினரும் அதன் படையினரும் தடுத்துள்ளனர். இவர்களது இழி செயலுக்கு வரலாறு பதில் சொல்லும்.” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஆகவே, எமது அன்பார்ந்த தமிழ் மக்களே! இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முடக்கப்பட்டிருப்பதால் நாங்கள் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கேட்டுக் கொண்டபடி இன்று மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம். எமது வீட்டு முற்றங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவோம்.” என்று மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
“இல்லங்களில் ஒரு வேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியைத் தயாரித்து உண்போம். அந்தவேளையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு இனப் படுகொலையின் உண்மையை எடுத்து விளக்குவோம். நினைவிடத்தை அழிக்கலாம்; நினைவுகளை அழிக்க முடியாது என்பதை உரத்துச் சொல்வோம்.” என்று யாழ்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையில் உறுதிப்பட தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.