Aran Sei

பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை: இந்த சோதனையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக இங்கிலாந்து அரசு தகவல்

மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் செய்தி நிறுவனம் பிபிசி. இந்நிறுவனம் இந்தியாவிலும் ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் செய்தி வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை ஆகிய 2 இடங்களில் பிபிசி தனது அலுவலகங்களை அமைத்துள்ளது.

இந்நிலையில், பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் நேற்று (பிப்ரவரி 14) மதியம் முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை: “பாஜக அரசு விமர்சனங்களுக்குப் பயப்படுவதையே இது காட்டுகிறது” – காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்த சோதனை 2-வது நாளாக இன்றும் நடைபெற்று வரும் நிலையில் பிபிசி அலுவலகத்தில் உள்ள லேப்டாப்கள், ஆவணங்கள், ஊழியர்களின் செல்போன்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். லாபத்தை மடைமாற்றம் செய்து வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறையினர் ஆய்வு நடைபெற்று வருவதால் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற பிபிசி செய்தி நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, பிபிசி செய்தி நிறுவனம் மீது வருமான வரித்துறை ஆய்வு நடத்தி வரும் சூழ்நிலையில் ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேவேளை, பிபிசி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் – பிபிசி நிறுவனம் ட்வீட்

முன்னதாக, குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணப்படம் குஜராத் கலவரத்திற்கு அப்போதைய முதலமைச்சரும், இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி தான் நேரடிப்பொறுப்பு என்று குற்றம் சாட்டியிருந்தது.

அதேபோல், இந்தியா: மோடி கேள்விகள் என்ற பெயரில் பிபிசி வெளியிட்ட 2வது ஆவணப்படத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச்சட்ட போராட்டம், டெல்லி வன்முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய அரசை விமர்சித்து பிபிசி கருத்து வெளியிட்டிருந்தது. இந்த ஆவணப்படங்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : India today

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்