இந்தியாவில், சாதி மற்றும் மத மறுப்பு திருமணங்கள் வழியே சாதிய மற்றும் சமூக பதற்றத்தை குறைக்கும் வேலையைப் படித்த இளைஞர்கள் முன்னெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக (Lecturer) பணியாற்றி வந்த இரு வேறு சாதியைச் சேர்ந்த நபர்கள் காதலித்து வந்துள்ளனர், திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால், வீட்டை விட்டு வெளியேறிக் கடந்த 2020 ஆம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து, தங்களுடைய பெண்ணைக் காணவில்லையெனப் பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்தப் பெண்ணின் குடும்பத்தார் அந்தப் பெண்ணுக்குப் பல்வேறு அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் விடுத்துள்ளனர். இதனால் அந்தத் தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தை நாடியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஆரோக்கியத்தை கொடுக்கும் சாதி மறுப்பு திருமணம் – மரபணு ஆய்வு முடிவு
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ரிஷிகேஷ் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ”சாதியும் சமூகமும் முக்கிய பங்காற்றிய திருமண விதிகளிலிருந்து வெளியேறி, படித்த இளைஞர்கள் (ஆண்/பெண்) தங்களுக்கு விருப்பமானவர்களை வாழ்க்கை துணையாகத் தேர்தெடுக்கிறார்கள்.
சாதிய மற்றும் சமூக பதற்றங்கள் இது போன்ற திருமணங்களால் குறையும், இது சமூகத்தை முன்னோக்கி அழைத்துச் செல்லும், முக்கியமான விஷயமாகும்” என நீதிபதி சஞ்சய் கிஷன் தெரிவித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
மதமாற்ற தடைச் சட்டம்: யோகி ஆதித்யநாத் அரசுக்கு சவாலாக விளங்கும் அலகாபாத் உயர்நீதி மன்றம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை, அம்பேத்கரின் ”சாதி ஒழிப்பு” நூலில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டிய நீதிபதி, ”சாதியை ஒழிப்பதற்கு தேவையான முக்கியமான அம்சம் சாதி மற்றும் மத மறுப்பு திருமணம் என்பதை நான் உணர்ந்து விட்டேன். இரத்த பந்தத்தின் வழியே தான் உற்றார் உறவினர் என்கின்ற உணர்வை ஏற்படுத்த முடியும். ரத்த சொந்தம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டியது தான் முதன்மையானது. அதுவரை சாதி உருவாக்கி வைத்துள்ள பிரிவினைவாத எண்ணம் விலகாது” என்ற வரிகளை அவர் குறிப்பிட்டுள்ளதாக தி இந்துவின் செய்தி கூறியுள்ளது.
மற்றொரு நீதிபதியான ரிஷிகேஷ் ராய், யாரை திருமணம் செய்வது கொள்வது என்பது தொடர்பாக ஒரு நபர் எடுக்கும் முடிவு எனவும் அவரின் தனிப்பட்ட விஷயமாகும். அவருடைய தேர்வு தொடர்பாக நாம் எதுவும் கூற இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டத்தை பெண்களும் ஏன் எதிர்க்க வேண்டும்? – ஆரிஃபா ஜோஹரி
மேலும், தன்னுடைய வாழக்கை துணையை தேர்ந்தெடுக்கும் அந்தத் தனிநபரின் உரிமை பொருளாதார சிந்தனையாலும் சாதிய அமைப்புகளாலும் தடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்
அந்தப் பெண்ணுடைய பெற்றோர்கள் அளித்த புகார்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு சாதி மற்றும் மத மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு ஆபத்துகளிலிருந்து உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.