இந்திய ரயில்வே துறையில் நாடுமுழுவதும் அபாயகரமான பணிபுரியும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கடந்த மூன்றாண்டுகளாக மாதத்திற்கு 75 ரூபாய் மட்டுமே ‘அபாயகரமான பணிபுரிவதற்கான தொகையாக’ வழங்கிவருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறை, நிலத்தடி வடிகால் / கழிவுநீர் குழாய்கள் தொடர்பாகப் பணிபுரிபவர்கள், மலக்குழி சுத்தம் செய்பவர்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பணிபுரிபவர்கள், எலக்ட்ரோலைட்டுகளின் பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள், குரோம் முலாம், கால்வனிங் தொட்டிகள், கழிவுப்பொருள் சுத்திகரிப்பு நிலையம், அபாயகரமான இரசாயனங்களுக்கான காப்பு கூறுகளை உற்பத்தி செய்தல், எக்ஸ்ரே பணியாளர்கள் ஆகிய இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை 12 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
மேலும், கடந்த 2018 ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சகம் அபாயகரமான பணிபுரிவதற்கான தொகையை 60 லிருந்து 135 ரூபாய் ஆக உயர்த்தியது. அது ஜூலை 1,2017 லிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என்றும், இது 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்ததாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த அறிவிப்பு வந்து மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில், தற்போது ரயில்வே நிர்வாகம், பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் , அபாயகரமான பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஜூலை 1,2017 முதல் நவம்பர் 2,2020 வரை 6 வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, மாதம் 60 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
மேலும், 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி நவம்பர் 3,2020 க்கு பிறகு மாதம் 90 ரூபாய் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் முரணாக அறிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அனைத்து மண்டல ரயில்வே நிர்வாகங்கள், ரயில் பெட்டி தொழிற்சாலைகள், இதர ரயில்வே நிர்வாகங்கள், ஜூலை 1,2017 முதல் நவம்பர் 2,2020 வரை அபாயகரமான பணிபுரிவதற்கான தொகையாக 60 ரூபாயும்,நவம்பர் 3,2020 க்கு பிறகு கூடுதலாக 45 ரூபாய் கணக்கீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.