Aran Sei

திரிபுராவில் அகதிகள் எதிர்ப்பு – பாஜகவுடன் கைகோர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

டக்கு திரிபுராவில் புரூ அகதிகளை குடியேற்றுவதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மாநில மக்களின் உரிமைகளைக் காக்க இந்தப் போராட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

வடக்கு திரிபுராவில் உள்ள கான்சன்பூர் பகுதியில் 5,200 புரூ குடும்பங்களை குடியேற்றம் செய்ய திரிபுரா அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் நவம்பர் 16-ம் தேதி முதல் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நிர்வாகத்தின் தடையை மீறி நான்காவது நாளாக நீடித்துவரும் போராட்டத்தில், பள்ளி மாணவர்களும் பங்கெடுத்துள்ளதாக தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மிசோரத்தில் நிகழ்ந்த இன வன்முறையிலிருந்து தப்பிய 40,000க்கும் மேற்பட்ட இந்த புரூ அகதிகளின் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் இணைந்து அரசியல் தலையீடு இல்லாத ஒரு கூட்டு இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இயக்கத்தைச் சேர்ந்த சுஷாந்த விகாஸ் “புரூக்களின் குடியேற்றத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தப் பகுதியில் 500 குடும்பங்கள் மட்டுமே குடியமர்த்த முடியும் எனும்போது அரசு 5000 – 6000 குடும்பங்களைத் திணிக்காமல், மாநிலம் முழுவதும் பிரித்து குடியமர்த்த வேண்டும்.” என்று கூறியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

திரிபுரா முதலமைச்சர் விபல்ப் குமார் தேவ், ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புரூ மக்களை குடியேற்றம் செய்வதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

மாநில மக்களின் குரலுக்கு பாஜக அரசு செவி மடுக்கவில்லை என்றால் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகுவார்கள் என்று தத்சா பகுதியின் பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திரிபுரா அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோத் கிஷோர், “புரூ மக்கள் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்களே. திரிபுரா அணைக் கட்டும் பணியின்போது மிசோரத்துக்கு குடிபெயர்ந்தவர்கள், அகதிகளாகத் திரும்பியுள்ளார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்