இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட நான்கு தமிழக மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று (ஜனவரி 27), இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பில், அம்மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், சமீபத்தில் இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட நான்கு தமிழக மீனவர்களுக்கு மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் தமிழ்வின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர், ஊடகவியலாளர்கள் என்று பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அப்பொழுது உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தேசிய அமைப்பாளர் த.சுரேஷ், “இந்திய இலங்கை எல்லையில் நடந்த துயர சம்பவத்தில் நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்தமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம்.நம்மை பொறுத்தமட்டில் இதை ஒரு படுகொலையாகவே கருதுகின்றோம்.ஏனென்றால் படகு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று கூறியுள்ளதாக தமிழ்வின் தெரிவித்துள்ளது.
“படகு விபத்துக்குள்ளாகி அந்த படகு கடலில் மூழ்கும் வரை இலங்கை கடற்படை என்ன செய்து கொண்டு இருந்தது? இலங்கை கடற்படை மீனவர்களைக் காப்பாற்ற முடியாத ஒரு திறமையற்ற கடற்படையாக இருந்ததா? என்ற கேள்வி எழுகிறது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “தமிழக மீனவர்கள், தமிழ் மீனவர்கள் என்ற காரணத்திற்காகவே இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே இந்த மீனவர்கள் உயிரிழப்புக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று கூறியுள்ளதாக தமிழ்வின் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.