Aran Sei

லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் வழக்குப் பதிவு : யோகி அரசு

credits : indian express

ட்டவிரோத மதமாற்றம் செய்ததாக, உத்தரப்பிரதேசக் காவல்துறை முதல் வழக்கைப் பதிவு செய்துள்ளது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ”இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதல் (லவ் ஜிகாத்) என்ற பெயரில் திருமணம் செய்து மதமாற்றம் செய்வதைத் தடுப்பதற்குச் சட்டம் இயற்றப்படும்” எனத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

அதன்படி, மதமாற்றத்தைத் தடுப்பதற்காக மாநில சட்ட கமிஷன் புதிய மசோதாவைத் தயாரித்து அரசுக்குச் சமர்ப்பித்தது. இதனடிப்படையில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் அவசரச் சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

‘லவ் ஜிகாத்-ல்’ ஈடுபட்டால் 5 ஆண்டுகள் சிறை – மத்தியப் பிரதேசம்

இந்நிலையில் திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உபி அமைச்சரவை இயற்றிய சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் (27/11/20) ஒப்புதல் அளித்தார்.

இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

இந்நிலையில் கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக ஓவைஸ் அகமத் மீது பரேலி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு பதிவு செய்யப்படும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷரிஃப்நகரைச் சேர்ந்த டிக்காராம், தனது மகளுடன் கல்வி நிலையங்களில் நட்பாகப் பழகி வந்த ஓவைஸ் அகமது திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன் மகளைக் கவர்ந்து, ஏமாற்றியுள்ளார் என்றும் தற்போது மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார் என்றும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ”நானும் என் குடும்பத்தாரும் பல முறை கூறியும் அந்தப் பையன் கேட்கவில்லை. அவனுடைய ஆசையை நிறைவேற்ற எங்களுக்குக் கொலை மிரட்டல் உட்பட பல்வேறு அழுத்தங்களைத் தருகிறார்” என ஓவைஸ் அகமது மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை

உத்தரப் பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் (2020) கீழ் பரேலி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 504 (அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது) மற்றும் 506 ( குற்றங்கருதி மிரட்டுவது) -ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் திருமணம்செய்துகொள்ள அந்தப் பெண் மதம் மாற வேண்டும் என்று ஓவைஸ் கட்டாயப்படுத்தியதாகக் காவல்துறை அதிகாரி சிங் கூறியுள்ளார் என தி இந்து கூறியுள்ளது.

ஓவைஸ் அகமது தப்பித்துச் சென்று விட்டதாகவும் இவரைத் தேடும் பணியில் காவல்துறை இருப்பதாகக் காவல்துறை அதிகாரி சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசச் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம், கட்டாய மதமாற்றம் செய்ததாகக் கைது செய்யப்படும் நபருக்கு பிணை வழங்க மறுத்துள்ளது. மேலும் மதமாற்றம் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டுப் போலியாகத் திருமணம் செய்வது, கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி அவர்கள் மீது அதிகாரம் செலுத்தி மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனக் கூறுகிறது.

இந்தச் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.15,000 அபராதத்துடன் ஒரு வருடம் முதல் ஐந்து வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

`லவ் ஜிகாத்’ இருக்கு ஆனா இல்ல : சிறப்பு விசாரணைக் குழு கூறுவது என்ன?

சிறார்கள், பட்டியல் சமூக மக்கள், பழங்குடி மக்கள் ஆகியோரைச் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்தால் ரூ.25,000 அபராதம் உட்பட மூன்று ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் வழங்கப்படும் எனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை மதமாற்றம் செய்தால் ரூ.50,000 உட்பட, மூன்று ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்