Aran Sei

ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா., தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

Credit : NPR.org

க்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

அமெரிக்கா, அல்பெனியா முன்மொழிந்த தீர்மானத்தை 11 நாடுகள் அங்கீகரித்த நிலையில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தீர்மானத்தை ஆதரித்து ஆஸ்திரேலியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஜார்ஜியா, ஜெர்மனி, இத்தாலி, லீசெஸ்டைன், லக்ஸம்பெர்க், நியூசிலாந்து, நார்வே, போலந்து, ருமேனியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1

15 நாடுகள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா, அதன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தைத் தோற்கடித்துள்ளது.

தீர்மானத்தின் மீதான விவாதம்குறித்து பேசிய அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் க்ரீன்ஃபீல்டு, “ரஷ்யா இந்த தீர்மானத்தைத் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நசுக்கி இருக்கலாம். ஆனால், எங்கள் குரல்களை நெறிக்க முடியாது. ஐ.நாவின் கொள்கைகளை நசுக்க முடியாது. உக்ரைன் மக்களையும் உங்களால் நசுக்க முடியாது” என கூறியுள்ளார்.

பிரிட்டன் தூதர் பார்பரா வுட்வார்டு, “ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ஆதரவு இல்லை” என தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தின் மீது வாக்களிக்காதது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, “பேச்சுவார்த்தைமூலம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும். மனித உயிர்களை பறிப்பது என்பது எந்த வகையிலும் தீர்வைத் தராது. ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டது தவறு. அதற்காக வருந்துவதோடு, மீண்டும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புமாறு அனைத்து தரப்பினரையும் வழியுறுத்துகிறோம்” என கூறியுள்ளார்.

மேலும், ”உக்ரைனில் நடந்து வரும் தாக்குதல்கள் பெருமளவில் கவலையளிக்கின்றன. வன்முறையை விடுத்து, வெறுப்பைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை குறிப்பாக மாணவர்களை மீட்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு, இந்த தீர்மானத்தில் வாக்கெடுப்பதை இந்தியா புறக்கணிக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்