Aran Sei

‘சீமானை புறக்கணியுங்கள்’ – தமிழ்நாடு இளைஞர்களுக்கு ஜோதிமணி எம்.பி. வேண்டுகோள்

பாஜகவின் முன்னாள் பொதுச்செயலாளர்  கே.டி. ராகவனுக்கு ஆதரவாகப் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டுமென காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சீமான், உலகத்தில் நடக்காத ஒன்றை கே.டி.ராகவன் செய்து விட்டதைப் போன்றுக் காட்டப்படுகிறது என்று கே.டி.ராகவனுக்கு ஆதரவாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜோதிமணி, “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,  சுரண்டலை கேள்வி கேட்கும்  சமூகம் சரியாகத்தான் இருக்கிறது. பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,  சுரண்டலை  சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் சீமானின்  செயல்பாடுதான் வெட்கக்கேடானது” என்று கூறியுள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மன்நிலையை சீமான் உருவாக்குகிறார் என்றும், இது ஒட்டுமொதத பெண்களுக்கும். தமிழ் சமூகத்திற்கும்  ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இவர்கள் எல்லாம் பெண்களின் பாதுகாப்பு உணர்வு, மரியாதை,  கண்ணியம் பற்றித் துளிகூட  கவலைப்படாதவர்கள். பெண்களைப் பாலியல் ரீதியான வன்முறைக்கு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள்” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், “எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்  நடக்கின்றனவோ அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டுதானிருக்கின்றன என்பதை திரு. சீமான் நினைவில் கொள்ள வேண்டும்.அந்தப் போராட்டங்களின் பயனாகவே இன்று பெண்கள் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது வெற்றிகரமான பங்களிப்பைச் செலுத்தி வருகிறார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, பெண்கள் கண்ணியத்துடனும். மரியாதையுடனும் பாதுகாப்புடனும் நடத்தப்பட வேண்டும் அப்படி இல்லாமல்,பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்பவர்கள்  தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இதுதான் ஒரு நாகரிகமான சமூகத்தின் கடமை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜோதி மணி தெரிவித்துள்ளார்.

மேலும்,”சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன பாதிக்கப்பட்ட பெண்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின்  பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும், சீமான் பாஜகவின் b Team என்பதை  மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறார்” என்றும்  அவர் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது. சீமான், கே டி. ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். தமிழகம்– குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும் மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தைப் புரிந்துக் கொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமுகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு என்று நாடாளுமன்ற உறுப்பினர்  ஜோதி மணி தமிழக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்