மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சுற்றியுள்ள போராட்டப் பகுதிகளில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது தொடர்பான சிஎன்என் செய்தியை குறிப்பிட்டுள்ள ரிஹான்னா “இது (விவசாயிகள் போராட்டம் ) குறித்து நாம் ஏன் பேசுவதில்லை?” என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு
விவசாயிகளுக்கு ஆதரவான ரிஹான்னாவின் பதிவு, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக ஆதராவளரும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத், ‘போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள்’ என்றும், ‘அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்’ என்றும் கூறியதோடு, பாடகர் ரிஹானாவை “முட்டாள்” என்றும் கூறியிருக்கிறார்.
No one is talking about it because they are not farmers they are terrorists who are trying to divide India, so that China can take over our vulnerable broken nation and make it a Chinese colony much like USA…
Sit down you fool, we are not selling our nation like you dummies. https://t.co/OIAD5Pa61a— Kangana Ranaut (@KanganaTeam) February 2, 2021
“அதைப் பற்றி யாரும் ஏன் பேசுவதில்லை என்றால், அவர்கள் விவசாயிகள் இல்லை, பயங்கரவாதிகள். பலவீனமான, பிளவுபட்ட நாட்டை சீனா கைப்பற்றி, சீன காலனியாக மாற்றும் வகையில் அவர்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்.” என்று கங்கனா ட்வீட் செய்துள்ளார்.
“வாயை மூடிக் கொண்டு உட்கார் முட்டாளே, உங்களைப் போன்ற அறிவிலிகளாக நாங்கள் நாட்டை விற்கவில்லை” என்றும் கங்கனா தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
ரிஹான்னாவை கண்டித்து, கங்கனா ட்விட்டரில் அளித்த பதில் கவனத்தை பெற்றிருந்த அளவுக்கு, பீகாரைச் சேர்ந்த பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி மஞ்சியினுடைய ட்விட்டர் பதிவும் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
कांग्रेस-वामपंथियों को अब पाकिस्तानी सिंगर का सहारा
— हरि मांझी (@HariManjhi) February 2, 2021
அமெரிக்காவைச் சேர்ந்த பாப் இசை கலைஞரான ரிஹானாவை ஹரி மஞ்சி ”பாகிஸ்தான் பாடகர்” என்று குறிப்பிட்டுள்ளது சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டு வருகிறது. அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தற்போது பாகிஸ்தான் பாடகருக்கு ஆதரவளிக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை செயற்பாட்டாளர்களான கிரேடா துன்பெர்க், வனேசா நகாடே, ஜேமி மார்கன், லிசிப்பிரியா கங்குஜம் ஆகியோரும் குரல் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.