Aran Sei

‘பெண்கள் இரவில் தனியாக வெளியே செல்லக் கூடாது’ – பாலியல் வன்கொடுமை குறித்து தேசிய மகளிர் ஆணையம் கருத்து

த்தர பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண், இரவில் தனியாக சென்றிருக்க கூடாது என்று மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி, பதாவன் மாவட்டத்தின் உகாய்தி எனும் பகுதியில் உள்ள கோயிலுக்கு, அங்கன்வாடி ஊழியரான 50 வயதுடைய பெண் சென்றுள்ளார். அவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் குடும்ப உறுப்பினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த கோயிலின் சாமியார் மற்றும் இருவர், அந்த பெண்ணினுடைய உடலை வீட்டில் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடம் எதுவும் கேட்கும் முன்னர் அங்கிருந்து சென்றுவிட்டதாக அந்த பெண்ணின் மகன் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில், உடனடியாக புகாரை பதிவு செய்யாத காவல்துறையினர், அந்தப் பெண் இறந்து இரண்டு நாட்களுக்குப் பின், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் கால் மற்றும் மார்பு எழுலும்புகள் முறிந்திருப்பதும், அவருடைய பிறப்புறுப்பில் காயங்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, சாமியாரின் உதவியாளர்களான வேத்ராம், ஜஸ்பால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாகியுள்ள சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காவல்துறை தாமதமாக செயல்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இதுகுறித்து விசாரிப்பதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்கள், பதாவன் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டனர்.

பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக கருதப்படும் இடத்தை பார்வையிட்டுள்ள அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தையும், கைது செய்யப்பட்ட ஜஸ்பாலின் குடும்பத்தையும் சந்தித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு உறுப்பினர்களில் ஒருவரான சந்திரமுகி தேவி “எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும், ஒரு பெண் நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும், அத்துடன் இரவில் தனியாக வெளியே செல்லக் கூடாது. அந்தப் பெண் மாலை நேரத்தில் தனியாக வெளியே செல்லாமல் இருந்திருந்தால், அல்லது குடும்ப உறுப்பினர் துணையுடன் வெளியே சென்றிருந்தால், அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

சந்திரமுகி தேவியின் இந்த கருத்து, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மாவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ரேகா ஷர்மா “எங்கள் உறுப்பினர் எப்படி மற்றும் ஏன் அவ்வாறு கூறியுள்ளார் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணுக்கு, அவர் நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்தில் செல்ல உரிமை உள்ளது. பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இந்த சமூகம் மற்றும் அரசுகளின் கடமையாகும்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்தப் பெண், மருத்துவமனையில் அளித்த மரண வாக்குமூலத்தின் வீடியோவை, பாஜக தகவல் தொடர்பு பிரிவு தலைவர் அமித் மால்வியா, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்று, பலரும் அமித் மால்வியாவை டிவிட்டரில் கண்டித்தனர்.

ஹத்ராஸ் கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்

இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்த ரேகா ஷர்மா “அவர் (பாதிக்கப்பட்ட பெண்) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்பது உறுதியானால், தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று கூறியிருந்தார்.

ஹத்ராஸ் பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது என்பதும், அமித் மால்வியா மீது தேசிய மகளிர் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்