30 நாட்கள் மருத்துவ விடுப்பு வேண்டி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ராபர்ட் பயஸ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பெயரில் இணைக்கப்பட்டு குடும்பத்தையும் உறவுகளையும் பிரிந்து கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அனுபவித்து வரும் கொடும் சிறைவாசத்தை தாங்கள் நன்றாக அறிவீர்கள். கர்ப்பிணியாக இருந்த எனது மனைவியோடு தாய் தமிழகத்தை நம்பி வந்த எனது வாழ்வை தொடங்க முற்படுகிறபோது மிகப்பெரும் கொலைப்பழி சுமத்தப்பட்டு சிறை படுத்தப்பட்டதால் என் வாழ்நாளில் முக்கால்வாசியை சிறைக்குள்ளே கழித்து விட்டேன்.
பொருள் தேடவும், கழிக்க வேண்டியதுமான அரிய இளமைக்காலத்தை முற்றாக எழுந்து விட்டேன். நான் சிறைபடும்போது மூன்று மாத கைக்குழந்தையாக இருந்த எனது மகனுக்கு இன்றைக்கு திருமணம் நடந்து எனது பேரனும் பிறந்து விட்டான். இன்னமும் நான் சிறை கொட்டடிக்குள்ளேயே கிடக்கின்றேன். திருமணம் ஆன சில காலத்திலேயே மிசாவில் அநீதியாக சிறைப்படுத்தப்பட்டு வதைபட்ட தாங்கள் சிறை தரும் கொடும் வலிகளை நன்றாக உணர்வீர்கள் என நம்புகிறேன்.
எங்கள் எழுவரின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவையானது அரசியல் அமைப்புச் சட்டம் 161 இன் படி 0.9. 09 2018 அன்று இயற்றிய தீர்மானத்தை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் ஆன்மீக கடமையெனக் கூறி எனது நண்பன் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கும் நிலையிலும் ஆளுநர் இன்றளவும் ஒப்புதல் தர மறுத்து வருவது வேதனை அளிக்கிறது.
31 ஆண்டுகள் என்னும் மிக மிக நீண்ட சிறைக் காலத்தினாலும் விசாரணை காலத்தில் நான் அனுபவித்த கொடுமையான சித்திரவதைகளின் தாக்கத்தினாலும் எனது உடல் நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கென அவ்வபோது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் போதிலும் என்னால் அவற்றிலிருந்து முழுமையாக இன்னும் மீள முடியவில்லை. இதனால் ஒவ்வொரு நாளையும் பெரும் சிரமங்களோடே கிடக்கின்றேன் வலியோடு தினம் தினம் அவதிப்படுகின்றேன்
இத்தனை ஆண்டுகளாக என்னை பிரிந்து தவிக்கும் எனது மனைவி பிரேமாவும் முதுமையினால் உடல் நலம் இன்றி வாடி வருகின்றனர். ஆகவே என் மனைவிக்கும் எனக்கும் உடல் நல குறைபாட்டுக்கு தொடர் சிகிச்சை எடுக்க வேண்டி இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட விதி எண் 40 இன் படி விதிகளை தளர்த்தி 30 நாள் விடுப்பு வழங்கி உதவுமாறு பணிவன்புடன் கோருகிறேன்.
சிறையிலிருந்து இவ்வளவு நீண்ட நெடிய காலத்தில் எனது நன்னடத்தையை உறுதி செய்திருக்கிறேன். ஏற்கனவே எனது மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக ஒரு மாத காலம் சிறை விடுப்பு பெற்று வெளியே வந்து எனது வழக்கறிஞர் சந்திரசேகரன் அவர்களின் இல்லத்தில் தங்கி இருந்தபோது அரசின் விதிகளை சரிவர பின்பற்றி இருக்கிறேன். ஆகவே மருத்துவ சிகிச்சைக்காக எனக்கு விடுப்பு வழங்கும் பட்சத்தில் அரசின் விதிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்றுவேன் என உறுதி கூறுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.
Kallakurichi school girl issue | Activists written to CJ raising apprehensions | Prince gajendrababu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.