Aran Sei

இட ஒதுக்கீடு விவகாரம் – பதிலளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் கேள்விக்குப் பதிலளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் வெளியிடப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு அமலாக்கம் குறித்து சந்தேகங்களை எழுப்பியிருந்தது. அது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், நிதியமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

வங்கிப் பணித் தேர்வில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறதா? – சு.வெங்கடேசன் கேள்வி

கேள்விகள்

பொதுப் பிரிவினர்க்கான கட் ஆஃப் 62, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர்க்கும் அதே 62 மதிப்பெண்களே கட் ஆஃப் என அம் முடிவுகள் வெளி வந்திருந்தன. எஸ்.டி பிரிவினர் கட் ஆஃப் 59.5 ஆகும். அதை விட பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோர் (EWS) கட் ஆஃப் குறைவாக 57.75 என இருந்தது. இக்கட் ஆஃப் விவரங்கள் சமூக யதாரத்தங்களோடு பொருந்துவதாக இல்லாமல் இருப்பதாகக் கூறி, இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

தனியர்களுக்கே அவரவர் கட் ஆஃப் விவரங்கள் அனுப்பப்படுவதால் இட ஒதுக்கீடு அமலாகிறதா என்பதற்கான சமூகத் தணிக்கைக்கான வாய்ப்பின்றி உள்ளது என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். எல்லோருடைய கட் ஆஃப் விவரங்களும் தேர்வு பெற்றோர் பட்டியலோடு பொது வெளியில் அறிவிக்கப்பட வேண்டுமென்றும் கோரி இருந்தார்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடு குறைப்பு – திருமாவளவன் கடும் கண்டனம்

இந்தத் தேர்வுகளை நடத்தும் ஐ.பி.பி.எஸ் அமைப்பு ஆர்.டி.ஐ உள்ளிட்ட சமூகக் கண்காணிப்பிற்கு உட்படுவதில்லை என்பதைச் சுட்டிக் காட்டி, அரசின் ஆணைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய எந்தவொரு அமைப்பும் இப்படி சமூகக் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், பொதுப் பட்டியல் என்பது இடஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான்; அவர்கள் பொதுப் பட்டியல் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேலாகப் பெறும் போது பொதுப் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்ற நெறி கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்றும் எவ்வாறு பொது, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர் கட் ஆஃப் ஒரே அளவில் உள்ளன என்றும் கேட்டிருந்தார்.

`இதுதாய்யா மநு நீதி’- இட ஒதுக்கீடு பிரச்சனையில் வலுக்கும் கண்டனங்கள்

கூடுதலாக, இப்பணி நியமனங்களுக்கு வரப் பெற்றுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பிரிவு வாரியான தகவல்களையும் கேட்டிருந்தார்.

அமைச்சர்கள் பதில்

கடந்த அக்டோபர் மாதம்,  22 ஆம் தேதி, நிதி அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், அமைச்சரவை செயலாளர் ஆகியோருக்கு, சு.வெங்கடேசன் எழுதிய கடிதங்களுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவார்சந்த் கெலாட், சு.வெங்கடேசனின் கடிதத்தை நிதியமைச்சகத்திற்கு, அக்டோபர் 23 ஆம் தேதி அனுப்பி அது குறித்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தார். நிதி இணை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் நவம்பர் 10 ஆம் தேதி, இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

புதிய கல்விக்கொள்கையில் ‘இடஒதுக்கீடு’ என்ற சொல்லே இடம் பெறாதது ஏன்? – சீதாராம் யெச்சூரி

இந்த நிலையில், இன்று சு.வெங்கடேசன் தன் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”நவம்பர் 23 அன்று மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக்சிங் தாகூர், ஸ்டேட் வங்கி சேர்மனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் இடமிருந்து வந்துள்ள கடிதத்தையும், சு. வெங்கடேசன் எம்.பி கடிதத்தையும் குறிப்பிட்டு நவம்பர் 30 க்குள்ளாக விதிகள் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா என்று உரிய நடவடிக்கை எடுத்துப் பதில் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நவம்பர் 30 க்குள்ளாக என்று காலக் கெடு நிர்ணயம் செய்து அறிவுறுத்தியுள்ளதால் இன்னும் சில நாட்களிலாவது பதிலை எதிர் பார்க்கிறேன். ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில் வெளிப்படைத்தன்மையும், கண்காணிப்பும் அரசுத் துறை நிறுவனங்களிடம் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்