மத்திய அமைச்சர்களை சந்தித்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசு தரப்பிலிருந்து தரப்பட்ட உணவை உண்ண மறுத்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்தச் சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம் – கொச்சைப் படுத்திய அமித் மால்வியா – எச்சரித்த டிவிட்டர்
எனவே, இச்சட்டங்களை எதிர்த்து டெல்லியில் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து தில்லி சலோ (தில்லி போவோம்) எனும் பேராட்டத்திற்கு விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதைத்தொடர்ந்து தில்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக முள்வேலி, மணல் மூட்டைகள், ட்ரோன்கள், நீர் பீரங்கிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதையடுத்து, விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த குறிப்பிட்ட சில சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு மட்டும் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்திருந்தார். அனைத்து விவசாயச் சங்கங்களையும் அழைக்காததன் மூலம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது என்று விவசாயத் தொழிலாளர்களின் போராட்டச் சங்கம் (கேஎம்எஸ்சி) குற்றஞ்சாட்டியுள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 1-ம் தேதி நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், சர்ச்சையாகியுள்ள மூன்று சட்டங்களைப் பற்றி ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற அரசின் திட்டத்தை விவசாய சங்கங்கள் நிராகரித்தன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 3-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
எட்டாவது நாளாக ‘தில்லி சலோ’ ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைத் தோல்வியுற்றதையடுத்து, விவசாயிகள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக நேற்று (03.12.2020) விக்யான் பவனில் கூடினர். 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு வழங்கிய தேநீரையும் , உணவையும் விவசாயிகள் உண்ண மறுத்ததாக தி இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
”அவர்கள் (அரசு) எங்களுக்கு உணவை வழங்கினார்கள், நாங்கள் வாங்க மறுத்துவிட்டோம், குருத்வாராவிலிருந்து கொண்டுவரபெற்ற உணவை வைத்துள்ளோம்” என ஒரு விவசாயி என்டிடிவி -யிடம் கூறியுள்ளார்.
,இதேபோல் மற்றொரு விவாசயி “அரசாங்கம் வழங்கும் உணவு அல்லது தேநீரை நாங்கள் ஏற்கமாட்டோம்” என்று கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மத்திய அரசு கொடுத்த உணவை பெற்றுக் கொள்ள மறுத்த விவசாயிகளின் முடிவு “சுயமரியாதையான” செயல் என குறிக்கும் வண்ணம் நடிகர் பிரகாஷ் ராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Self respect #FarmersProtest https://t.co/sHhkQFlEVi
— Prakash Raj (@prakashraaj) December 3, 2020
மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், பஞ்சாப்பைச் சேர்ந்த வர்த்தக துறையின் மத்திய இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படாததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.