Aran Sei

ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மே 17 இயக்கம் வேண்டுகோள்

மிழீழ ஏதிலியர்களுக்கான திமுக அரசின் நலத்திட்டஅறிவிப்புகளை வரவேற்றுள்ள மே பதினேழு இயக்கம், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவும், சிறப்பு முகாம்களை இழுத்து மூடவும், ’ஈழத்தமிழர்’ என்ற தேசிய அடையாளத்துடன் அழைக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ அகதிகளின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் சுமார் ரூ.317 கோடி நிதியில் நலத்திட்டங்களை தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டின் ஏதிலிகள் (அகதிகள்) முகாம்களிலும் வெளியிலும் வசித்து வரும் தமிழீழ மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்ற வகையில் இதனை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது. சமூகத்தில் ஏதிலிகள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இரட்டைக் குடியுரிமை, வேலைவாய்ப்பு, உளவுத்துறையின் தீவிர தொடர் கண்காணிப்புகளிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தித் தர வேண்டுமென தமிழ்நாடு அரசிடம்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வசித்து வரும் தமிழீழ மக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் , கடந்த 27-08-2021 அன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டமன்றத்தில் அறிவித்திருதார். தமிழீழத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ.317.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழீழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

தமிழ்நாட்டின் சிறப்பு முகாமிலிருந்து திருப்பி வலிந்து அனுப்பப்பட்ட பலரின் இன்றைய நிலை தெரிந்து கொள்ளமுடியாத நிலை உள்ளது. அவர்களில் சிலர் காணாமல் போனதும் அறியவந்துள்ளது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்நிலையில், தமிழீழம் விடுதலை பெறாமல் தமிழீழ மக்கள் நாடு திரும்புவது இயலாத ஒன்று என்பதே களநிலவரமாக உள்ளது என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் வாழும் தமிழீழத் தமிழர்களுக்கு இந்திய நாட்டின் குடியுரிமையை கூடுதலாக வழங்கி இரட்டைக்குடியுரிமை பெறுவதற்கு தனிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

”அகதிகளுக்காக சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடாத நிலையில், தஞ்சமடைந்த தமிழீழ மக்களை அகதிகளாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், தமிழீழ மக்களைச் சட்டவிரோத குடியேறிகளாகவே இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது. இதுவே தமிழீழ மக்கள் கடும் துயரங்களைச் சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளுகிறது. இதனை மாற்றும் வகையில், இரட்டை குடியுரிமையை இந்தியா வழங்கும் வரை, தமிழீழ மக்களை “புலம்பெயர்ந்து வாழும் சட்டபூர்வ வாசிகள் (Migrated Legal Residents)” என்ற தனிப்பிரிவை குடியுரிமை சட்டத்தில் உருவாக்கத் தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. திபெத்தியர்கள் நலனுக்காக தனிச்சட்டம் இருக்கும் இந்த நாட்டில் தமிழீழத் தமிழர்களுக்கு தனிச்சட்டம் கொண்டு வரப்படுவது சாத்தியமே” என்று மே17 இயக்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

”தற்போது தமிழ்நாட்டில், முகாம்களில் சுமார் 60,000 பேரும், முகாம்களுக்கு வெளியே சுமார் 35,000 பேருக்கும் அதிகமானோர் அகதிகளாக வசித்து வருகின்றனர். இரண்டு சிறப்பு முகாம்கள் உட்பட108 முகாம்கள் உள்ளன. இவை அவர்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கக் காரணிகளாகவே உள்ளன. அதிலும் சிறப்பு முகாம்கள் சிறைச்சாலையை ஒத்த சூழலைக் கொண்டுள்ளது. இங்கு குற்றப்பரம்பரையினர் போல் நடத்தப்படுகின்றனர். இவை உளவியல்ரீதியாக பாதிப்பை உண்டாக்குகிறது, அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் தடைகளும் ஏற்படுகின்றன. எனவே முகாம்கள் களையப்பட்டு அவர்கள் தமிழ்ச் சமூகத்தோடு கலந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குக் குடியுரிமை பெறுவதும், அதுவரை அவர்களை சட்டப்பூர்வ குடியேறிகளாக அங்கீகரிப்பதுமே தீர்வை வழங்கும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் மாநிலங்கள் முக்கிய பங்காற்றிட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் நீண்டகாலமாக கூறி வருகிறது. அந்தவகையில், இலங்கைக்கான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை, உலகத்தமிழர்களின் தேவைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள அரசாக விளங்கும் தமிழ்நாடு அரசு தீர்மானிக்க வேண்டும். அது தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழீழ மக்களிடமிருந்து துவங்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழீழத் தமிழர்களின் வாழ்க்கைத்தரம் உயர தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போதைய திமுக அரசை நல்லெண்ண அரசாக காட்டும். அதேவேளை, தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை அமைப்பது, பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவது, தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழீழ மக்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவது, அதுவரை அவர்களைச் சட்டப்பூர்வ குடியேறிகளாக அங்கீகரிக்க சட்டமியற்றுவது, முகாம்களைக் கலைத்து சமூகத்தில் கலந்திட செய்வது, அவர்களை தமிழீழ மக்கள் என சட்டப்பூர்வமாக பெயரிட்டு அழைப்பது, மலையகத் தமிழர்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்குவது போன்றவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தமிழ்நாடு அரசு நிறைவேற்றுமெனில், இனப்படுகொலைக்குள்ளான தொப்புள்கொடி உறவுகளை பாதுகாக்கும் வரலாற்று கடமையில் ஒருபடி முன்னேற்றத்தை தமிழ்நாடு தமிழர்களாகிய நாம் எட்டுவோம் என உறுதியாக நம்புவதாக மே 17 இயக்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்