எந்தவொரு நவீன சுதந்திர ஜனநாயகத்திற்கும் இடம் தராத தேசதுரோக சட்டம் போன்ற கடுமையான, பாழடைந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் (இஜிஐ) கோரியுள்ளது.
பத்திரிக்கையாளர் வினோத் துவா அவரது யூட்யூப் தொலைக்காட்சியில், வாக்குளைப் பெற மரணங்கள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதலை மோடி நடத்துவதாக குற்றச்சாட்டியிருந்ததாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த அஜய் ஷியாம் என்பவர் கடந்தாண்டு புகாரை அளித்திருந்தார்.
கடந்த ஆண்டு, மார்ச் 30 அன்று, ஒளிபரப்பான அந்தக் காணொளி குறித்து பிரிவு 124ஏ (தேசத்துரோகம்), பிரிவு 268, பிரிவு 501 மற்றும் பிரிவு 505 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, “எந்த பத்திரிகையாளர் தனது துறையில் 10 வருட அனுபவம் பெற்றுள்ளாரோ, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியக் கூடாது. வல்லுநர் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுகிறேன்.” என்று வினோத் துவா கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி யூ.யூ.லலித் மற்றும் வினீத் சரண் அகையோர் அடங்கிய அமர்வு, வினோத் துவாவின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, அவர்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை நீக்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், இதுகுறித்து, இன்று (ஜூன் 4), இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் (இஜிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திர ஊடகங்கள்மீதும் நம்முடைய ஜனநாயகத்தின் மீதும் தேசத்துரோகச் சட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள்குறித்த உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கும் கவலைகள் இஜிஐ-க்கு திருப்தியளிக்கிறது. எந்தவொரு நவீன சுதந்திர ஜனநாயகத்திற்கும் இடம் தராத இந்தக் கடுமையான, பாழடைந்த சட்டங்களை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினோத் துவா மீதான வழக்கை ரத்து செய்ததுடன், நீதிபதி கேதார் நாத் சிங்கின் முந்தைய தீர்ப்பையும் பத்திரிகையாளர்களை தேசத்துரோக வழக்குகளிலிருந்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது என்று அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
“ஆயினும், இது போன்ற சட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்ட அமலாக்க அதிகாரிகளால் செயல்படுத்தப்படுகிறது. இச்சட்டங்களின் விளைவாக, ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்படாமலேயே சிறையடைக்கப்படுகிறார். இதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.” என்று இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.