மிசோராமில் உள்ள எங்கள் மாநில அமைச்சர்களுக்கு இந்தியும் தெரியாது சிலருக்கு ஆங்கிலமும் தெரியாது ஆகையால் தற்போதுள்ள தலைமைச் செயலாளரை நீக்கிவிட்டு மிசோ மொழி தெரிந்த புதிய தலைமைச் செயலாளரை நியமிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், மிசோராமில் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் ஜே.சி.ராம்தங்காவை தலைமைச் செயலாளராக நியமிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
“மிசோராமின் தலைமைச் செயலாளராக இருந்த லால்னுமாவியா சாகோ ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்குப் பிறகு கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் ஜெ.சி. ராம்தங்காவை தலைமைச் செயலாளராக நியமிக்க கேட்டுக்கொண்டேன். ஆனால், உள்துறை அமைச்சகம் திருமதி ரேணு ஷர்மாவை தலைமைச் செயலாளராக கடந்த அக்டோபர் 29 ஆம் நாள் நியமித்தது” என்று தெரிவித்துள்ளார்.
ரேணு ஷர்மா 1988 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். அவரை அக்டோபர் 28 ஆம் தேதி மிசோராமின் தலைமைச் செயலாளராக நியமித்து நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து பணிபுரிய உத்தரவிட்டிருந்தது ஒன்றிய உள்துறை அமைச்சகம். அதே நாளில் மிசோராம் அரசும் ஜெ.சி. ராம்தங்காவை தலைமைச் செயலாளராக நியமித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் “ வடகிழக்கில் உள்ள மாநிலங்களில் நாங்கள்தான் ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி வருகிறோம். மிசோரம் மாநிலத்தில் மிசோ மக்கள்தான் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இந்தி மொழி தெரியாது, அமைச்சர்களுக்கு இந்தி புரியாது, ஆங்கிலத்தை புரிந்துகொள்வதிலும் சிக்கல் இருக்கிறது.
இந்த பின்புலத்தில் இருக்கும் அமைச்சர்களுடன் தலைமைச் செயலாளர் மிசோ மொழி தெரியாமல் பணியாற்றினால் பல்வேறு நிர்வாகச் சிக்கல் ஏற்படும். மிசோ மொழி தெரியாமல் பணியாற்றும் தலைமைச் செயலாளரால் திறமையாகவும் செயல்படுவது கடினம்.
மிசோ மொழி தெரியாத அதிகாரியை தலைமைச் செயலாளராக நியமித்தது இல்லை. காங்கிரஸ் அரசாக இருந்தபோதும், ஒன்றியத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தாலும், மிசோரம் மாநிலம் உருவானதில் இருந்தே இது நடைமுறைதான் உள்ளது.
இந்தியாவின் பிற மாநிலங்களில், அந்தந்த மாநிலத்தின் அடிப்படை மொழி கூட தெரியாத தலைமைச் செயலர் பதவியேற்கவே இல்லை என்பது அனைவரும் அறிவர். தொடக்கத்திலிருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நம்பிக்கையான கூட்டணிக் கட்சியாக நாங்கள் இருக்கிறோம் என்பதால், எங்கள் கோரிக்கைய பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்” என மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடித்ததில் தெரிவித்துள்ளார்.
Source: ndtv
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.