தமிழில் போட்டித்தேர்வு எழுதுவோருக்கு மட்டுமே தமிழ்வழியில் படித்ததற்கான
சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான விதிகளில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் ஆணைப்படி, சில திருத்தங்களை அரசு செய்துள்ளது. தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலான 20% இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுக்க முழுக்க தகுதியானவர்களுக்கு மட்டும் சென்றடைவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன், 2010-ஆம் ஆண்டில் அப்போதைய கலைஞர் அரசு கொண்டு வந்த 20% இட ஒதுக்கீட்டைச் சிலர் முறைகேடாகப் பயன்படுத்துவதால், முழுக்க முழுக்க தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20% இட ஒதுக்கீடு கிடைக்கும்படி சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது என்று தெரிவித்துள்ளார்.
அதன்படியே, கடந்த 2020-ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு சட்டத் திருத்தம் செய்தது. இந்தச் சட்டத்திருத்தத்தை 20.01.2020 அன்று வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி பணிக்கான போட்டித் தேர்விலிருந்தே செயல்படுத்தும்படி 22.03.2021 அன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில், புதிய வழிகாட்டு விதிகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீடு எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காக மேலும் ஒரு கட்டுப்பாட்டைத் தமிழக அரசு விதிக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுதுபவர்களுக்கு மட்டும் தான் இந்தச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் கோரியுள்ளார்.
அதுமட்டுமின்றி,கடந்த காலங்களில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆங்கில வழியில் போட்டித் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். இப்போதும் கூட ஆங்கில வழியில் படித்தவர்கள் தமிழ் வழியில் படித்ததாகச் சான்றிதழ் பெற்று, ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதி வேலைவாய்ப்பைக் கைப்பற்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “அரசு வேலைவாய்ப்புகளில் 20% சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுவதன் நோக்கமே தமிழ் வழியில் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான். அதற்காகப் போட்டித் தேர்வுகளையும் தமிழில் எழுதுபவர்களுக்கு மட்டும் தான் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற கூடுதல் நிபந்தனையையும் புதிய அரசாணையில் அரசு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”. என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாடு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.