வட கிழக்கு டெல்லி கலவரத்தில் காவல்துறையை நோக்கித் துப்பாக்கியைக் காட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி, வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்முறையாக வெடித்தது. இதில் ஐம்பதற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
டெல்லி கலவரம் – விசாரணைக் குழு போலீசாரில் 4 பேருக்கு பதவி உயர்வு
இந்தக் கலவரத்தில் காவலர்களை நோக்கித் துப்பாக்கியுடன் செல்லும் நபருடைய புகைப்படம் வைரலானது. பின்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ஷாருக் பதான் என்று கண்டறியப்பட்டது. அவர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், விசாரிக்கப்படாமல் கடந்த பத்து மாதங்களாகச் சிறையில் இருக்கும் ஷாருக் பதானை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவருடைய வழக்கறிஞர் அக்தர் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனுவிற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் டி.கே.பாட்டியா, ஜாஃப்ராபாத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு ஷாருக் தப்பித்துச் சென்று, தலைமறைவானார் என்றும் ஒரு மாதத்திற்கு பின்னர் தான் காவல்துறை கைது செய்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஷாருக் பதானுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் கூறி அவர் கடுமையாக வாதிட்டதாக லைவ் லாவின் செய்தி கூறுகிறது.
டெல்லி கலவரம் – பரிதவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்; சுதந்திரமாக திரியும் குற்றவாளிகள்
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் சிறப்பு நீதிபதி அமிதாப் ராவத், ”குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர் டெல்லி கலவரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யபட்டுள்ளது. இந்தப் புகைப்படமே, டெல்லி கலவரத்தில் அவருடைய ஈடுபாட்டையும் நடத்தையையும் பற்றிப் போதுமான அளவு விளக்குகிறது” என்று கூறியுள்ளார். ஷாருக்கை ஜாமீனில் விடுவித்தால் அவர் தப்பித்து செல்லக்கூடும் எனக் கூறிய நீதிபதி, அவர் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.