தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் அவரைக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
நேற்று (அக்டோபர் 2), நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சிலர் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் கோட்சே ஜிந்தாபாத் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திரா காந்தியின் பேரனுமான வருண் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்,“இந்தியா என்றைக்குமே ஆன்மிகத்தில் அதீதசக்தி வாய்ந்த தேசமாக இருந்திருக்கிறது. ஆனால், மகாத்மா காந்திதான் அவரது வாழ்க்கை முறையின் வழியாக தேசத்தின் ஆன்மிக அடிநாதத்தை எடுத்துரைத்தார். நமக்கு ஒரு தார்மீக பொறுப்பையும் கற்றுக்கொடுத்தார். அதுதான் இன்றளவும் நம் தேசத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
India has always been a spiritual superpower,but it is the Mahatma who articulated our nation’s spiritual underpinnings through his being & gave us a moral authority that remains our greatest strength even today.Those tweeting ‘Godse zindabad’ are irresponsibly shaming the nation
— Varun Gandhi (@varungandhi80) October 2, 2021
மேலும், “ஆனால், இன்று சிலர் கோட்சே ஜிந்தாபாத் என டிவீட் செய்கின்றனர். அவர்கள் பொறுப்பற்ற தன்மையால் தேசத்தை அவமதித்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.
வருண் காந்தியின் இக்கருத்தை குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல் வரவேற்றுள்ளதோடு, காந்தியைக் கொலை செய்தவருக்கு ஆதரவாக பதிவு எழுதும் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டிவிட்டர் இந்தியா மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்தியுள்ளார்.
“இதுபோன்ற மோசமான செயல்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட வேண்டும். கோட்சேவுக்கு ஆதரவாக டிவீட் செய்பவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, “காந்தியை எதிர்த்த சக்தியும் அவருடன் நின்ற சக்தியுமே அவரைக் கொன்றது. அந்த சக்திகள்தான் இப்போது ஆட்சியில் உள்ளனர். காந்தியின் வாழ்க்கை போராட்டம் என அனைத்தையும் கொல்ல அவர்கள் முயற்சிக்கின்றனர். ஆர்எஸ்எஸ்ஸின் சந்தேகங்களுக்குரிய வரலாற்றில், ‘முகமூடிகள்’ எப்போதும் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. அவற்றைக்கொண்டு, ஆர்எஸ்எஸ்ஸின் உண்மையான முகத்தை மறைக்கின்றனர்” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், ஒருபுறம் காந்தியை ஆராதிக்கும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், மறுபுறம் கோட்சேவை சட்டப்பூர்வ தலைவராக்க ஊக்குவிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.