Aran Sei

கோவையில் காந்தியின் கொலைகாரர்களுக்காக காவல்துறை அதிகாரிகள் வாதாடுவதா? – சிபிஎம் கண்டனம்

காத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட  நினைவு நாளையொட்டி கோவையில் நடந்த நிகழ்வில் கோட்சேவை தாக்கிப் பேசக் கூடாது என காவல்துறை தடுத்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30 அன்று கோவை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சிவானந்தா காலனியில், காந்தி நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உறுதிமொழி வாசித்தார். இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தோழமை இயக்கங்களைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பங்கேற்றுள்ளார்கள்.

கோவை: கோட்சேவை எதிர்த்து முழக்கமிட்டவர்களை தடுத்த காவல்துறையினர்

உறுதிமொழி வாசித்துக் கொண்டிருந்தபோதே, ‘காந்தியை கொலை செய்தது கோட்சே என்கிற பகுதியை வாசிப்பதற்கு இடையூறாக மாநகர காவல்துறை துணை ஆணையரும். காவல்துறை ஆய்வாளரும் பாதியில் தடுத்துள்ளனர். ‘காந்தியை கொலை செய்தது கோட்சே என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நீதிமன்றமே அவருக்கு தூக்கு தண்டனை கொடுத்துள்ளது. காவல்துறை அந்த வாசகத்தை எதிர்த்து இடையூறு செய்வது சரியல்ல என்று ஜி.ராமகிருஷ்ணன் பலமுறை தெரிவித்தும் வாக்குவாதத்தை அதிகாரிகள் நிறுத்தவில்லை.

நிகழ்ச்சி நடக்கும்போதே காவலர்கள் சென்று பாதியில் இடையூறு செய்தது மிகத் தவறான நடவடிக்கையாகும். காந்தியை சுட்டுக் கொலை செய்தது கோட்சே தான் என்ற உண்மையை மறைப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் ஏன் முயற்சிக்க வேண்டும்? சில காவல்துறையினர் சிந்தனையில் காவிச் சிந்தனை குடிகொண்டிருப்பது அனுமதிக்கக் கூடியது அல்ல. இத்தகைய அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்படுவார்களா? என பல கேள்விகள் எழுகின்றன.

காந்தி நினைவுநாள் நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோட்சேவின் வாரிசுகளுக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை தெளிவுபடத் தெரிவித்துள்ளார். இதனை சம்மந்தபட்ட கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கோவை சம்பவம் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைவரும் மதச்சார்பற்ற கோட்பாடுகளை உறுதியாக கடைபிடிப்பதை தமிழக உறுதி செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்