பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் உள்ள குறைபாடுகளால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர், மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத்தின் கிளைக்கு அளித்திருக்கும் பதிலில், “ஒன்றிய அரசின் சார்பில், பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு 150 வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டன. அதில் 17 வெண்டிலேட்டர்களில் 6 யில் குறைபாடுகள் உள்ளன. இந்தக் குறைபாடுகளால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக இயங்காத மற்றும் பழுதடைந்த வெண்டிலேட்டர்களை திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு, அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ துறை தொடர்பில்லாத சட்டமன்ற உறுப்பினர் வெண்டிலேட்டர்களை ஆய்வு செய்ததாக வெளியான நாளிதழ் செய்தியைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ”வெண்டிலேட்டர்கள் உயிர்காக்கும் கருவி, அதில் ஏற்படும் சிறிய செயலிழப்பு கூட உயிருக்கு ஆபத்தாய் அமையலாம். எனவே இதில் அரசியல் செய்யாமல் இருந்தால், நாங்கள் பாராட்டுவோம்” என தெரிவித்துள்ளனர்.
பிரதமர் கேர்ஸ் நிதிமூலம் செயல்படாத வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டு இருப்பதை முக்கிய பிரச்னையாக கருதுகிறோம் என கூறிய நீதிமன்றம், இது தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள்குறித்து மே 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயைக் கையாளும் அதிகாரிகள் மருந்துகள், ஆக்ஸிஜன், நிதி மற்றும் மேலாண்மை ஆகியவற்றை வழங்குவது மற்றும் கோருவது தொடர்பான மனுக்கள் மற்றும் பொது நல வழக்குகளை, கடந்த இரண்டு மாதங்களாக மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.